௳ (முகப்பு)

View Original

காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோவில்

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு காவல் தெய்வமாக விளங்கிய அரசு காத்த அம்மன்

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலின் தெற்கு கோபுரத்திற்கு அருகில், சன்னதி தெருவில் அமைந்துள்ளது அரசு காத்த அம்மன் கோவில். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து வடமேற்கு திசையில் சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கருவறையில் அரசு காத்த அம்மன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் வடக்கு நோக்கி வீற்றிருகிறாள். அம்மன் வலது காதில் குண்டலம், இடது காதில் தோடு அணிந்து காட்சி தருகிறாள். இரு கோரைப் பற்களும், நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடது காலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

தல வரலாறு

பார்வதி தேவி, சிவபெருமான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காக காஞ்சியில் தவம் செய்தார் . பார்வதி தேவியின் அந்த தவத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக, அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய எட்டு பெண் தெய்வங்கள் பார்வதி தேவிக்கு காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் 'அரசு காத்த அம்மன்' என்று பெயர் வந்தது .

செல்வம் பெருக்கும் அம்மன்

அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. 'சம்பத்' என்றால் செல்வம். 'கரி' என்றால் யானை. யானை மீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் வந்தது. இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

வாதம், தோல் நோய், வாய் பேச இயலாதவர்கள் தங்கள் பிரச்சனை தீர இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அரசு காத்த அம்மன்

சம்பத்கரீஸ்வரி

அம்மன் எதிரில் யானை வாகனம்