௳ (முகப்பு)

View Original

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பார்கள். கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசைவரை, இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே.

கேதார கௌரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு, அதன் பலனாக சிவபெருமானும் பார்வதி தேவியும், அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும்.

ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காக தொடங்கியதே கேதாரகௌரி விரதமாகும். தீபாவளி திருநாளில், கேதார கெளரி நோன்பு கொண்ட நாளில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புத்தாடை வழங்கி, மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ்கரித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும். தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.