௳ (முகப்பு)

View Original

குன்னத்தூர் கோதபரமேசுவரன் கோவில்

மூலவரும், பரிவார தேவதைகளும் ராகு அம்சத்தோடு திகழும் அபூர்வத் தலம்

திருநெல்வேலி - மேலத்திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில், 11கீ.மீ தூரத்தில் உள்ளது குன்னத்தூர் என்கிற கீழத்திருவேங்கடநாதபுரம். இறைவன் திருநாமம் கோதபரமேசுவரன். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்பாள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவகைலாய தலங்களில் ராகு பரிகார தலம் இது. இந்த ஊர் செங்காணி எனவும் அழைக்கப்படுகிறது. காணி என்றால் நிலம், செங்காணி என்றால் செம்மண் பொருந்திய நிலம் எனப்பொருள்படும். இக்கோவில் 900 ஆண்டுகள் பழமையானது.

இங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த ரோமச முனிவர், ராகுவை நினைத்து வழிபாடு செய்ததால், ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாவும் இக்கோவில் திகழ்கிறது. மூலவர் லிங்கம் மார்பில் சர்ப்பம் போல் முத்திரை காணப்படுகின்றது. மூலவர் கோதபரமேசுவரன் மட்டுமின்றி, இங்கே தனித் தனிச் சந்நிதிகளில் அருளும் தட்சிணாமூர்த்தி, பைரவர்,ஆறுமுகநயினார், கன்னி விநாயகர், நந்தீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருமேனியிலும் ராகு இருப்பதைக் காண முடியும். இப்படி அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்வது இந்த தலத்தின் தனிச்சிறப்பாகும்.

சிவகாமி அம்பாளின் திருமேனி முழுவதும், ருத்ராட்சம் போன்று அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இவரை வழிபட, குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் விரைவில் கிடைக்கும்; மாங்கல்ய தோஷம் நீங்கும். இக்கோவிலின் வெளிபிரகாரத்தில் ஒரே கல்லி்ல் வடிவமைக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய ஆறுமுகநயினார் சந்நிதி உள்ளது.

பிரார்த்தனை

இத்தலமானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும். இத்தலத்து இறைவனை வழிபடுதல் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபடுதலுக்குச் சமமான ஒன்று. மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம்,காலதோஷம்,நாகதோஷம் ஆகியவற்றிற்கும் பரிகாரத் தலமாகும். இத்தலத்தை வழிபட்டால் வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் நீங்கும். மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

See this map in the original post