௳ (முகப்பு)

View Original

காட்டி சுப்ரமண்யா கோவில்

ஏழு தலை நாக வடிவில் முருகனும், நரசிம்மரும் ஒருசேரத் தோன்றும் அபூர்வக் காட்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ளது காட்டி சுப்பிரமணியா கோயில். இக்கோவில் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் கருவறையில் சர்ப்ப வடிவில் முருகப்பெருமானும், லட்சுமி நரசிம்மரும் ஒன்றாக காணப்படுவது தனிச்சிறப்பாகும்.

கருவறையில் ஏழு தலை நாகம் கொண்ட முருகரின் சிலையானது ஒரே கல்லில் செய்யப்பட்டது. சிலையின் பின்புறத்தில் நரசிம்மரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் முருகன் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் உள்ளனர். இரு தெய்வங்களும் ஒரே நேரத்தில் பக்தர்களுக்குத் தெரியும் வகையில், கருவறையில் பின்புறத்தில் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

கதிகேசுரன் என்ற அரக்கனை வீழ்த்துவதற்காக முருகப்பெருமான் ஏழு முகமுள்ள பாம்பின் வடிவமாக இத்தலத்தில் அமர்ந்து தவம் செய்ததாக ஐதீகம். அதே கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பாம்பு வடிவத்தில் இருந்ததால், தனக்கு கருடனால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த முருகப்பெருமான், தன்னைக் காக்கும்படி திருமாலை வேண்டுகிறார். திருமாலும் லட்சுமியுடன் கூடிய நரசிம்ம மூர்த்தியாக வடிவம் கொண்டு சுப்பிரமணியரைக் காக்கிறார். மேலும், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனிடம் இருந்து, பாம்புகள் (நாகர்கள்) குடும்பத்தைக் காப்பாற்றும்படியும் முருகப் பெருமான், நரசிம்ம மூர்த்தியிடம் வேண்டினார். எனவே இத்தலம் நாகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் பெற்ற கோவிலாக விளங்குகிறது.

பிரார்த்தனை

இத்தலம் செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் உள்ளவர்களுக்கு நிவர்த்தி தலமாக விளங்குகின்றது. பெரும்பாலான நாட்களில் சர்ப்ப தோஷ பூஜை அல்லது சர்ப்ப சம்ஸ்காரம் செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, சஷ்டி, ஆயில்யம் நட்சத்திர தினங்கள் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுவதால், அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆவணி நாக பஞ்சமி, குமார சஷ்டி தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இத்தலத்தில் குழந்தையில்லாத தம்பதியினரின் வேண்டுதலுக்கு இணங்க குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு பக்தர்களால் நாகர் சிலைகளை நிறுவுவும் பழக்கம் உள்ளளது. இதனால் கோவிலுக்கு அருகில் ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம்.

ஏழு தலை நாக வடிவில் முருகன்

முன்புறம் முருகனும், பின்புறம் நரசிம்மரும்

பக்தர்கள் நிறுவிய நாகர் சிலைகள்

See this map in the original post