௳ (முகப்பு)

View Original

சென்னை சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில்

ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் விநாயகரும், முருகப்பெருமானும் காட்சியளிக்கும் அபூர்வ கோலம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது சவுகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. சென்னையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இத்தலம் நிலத்திற்கு உரியது.

பல்லாண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக ஒருவர் வசித்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று அவர் காஞ்சிபுர கோவிலுக்கு செல்ல எண்ணியபோது, பல தடைகள் ஏற்பட்டது. பணியில் ஏற்பட்ட சிறிய சுணக்கம் காரணமாக அவரது முதலாளியும் கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்தார். பக்தரோ அதை மீறிக் கோவிலுக்கு சென்றார். வழியில் களைப்படைந்த அவர் இத்தலத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது, சிவன் அம்பாளுடன் காட்சிதந்து, 'இனி என்னை வழிபட நெடுதூரம் வரவேண்டாம்; நீ ஓய்வெடுத்த இடத்திலேயே நான் சுயம்புவாக இருக்கிறேன்; என்னை இங்கேயே வழிபடு, என்றாராம். அதன்பின், இவ்விடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

கோவிலுக்கு வெளியே அரசமரத்தின் அடியில் ஒரு இலிங்கம் தனி சன்னதியில் உள்ளது. கருவறைக்குள் சென்று நாமாக பாலாபிஷேகம், வில்வஇலை அர்ச்சனை செய்து வழிபடலாம். இங்கு, சப்தநாகத்தின் கீழ் சகோதர விநாயகர் தனிச்சன்னதியில் உள்ளார். இதே சிலையின் பின்புறத்தில் மயில்வாகனத்துடன் நின்ற கோலத்தில் முருகன் இருக்கிறார். இப்படி விநாயகரும், முருகப்பெருமானும் ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் எழுந்தருளியிருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.

See this map in the original post