௳ (முகப்பு)

View Original

சுப்பிரமணிய சுவாமி கோவில்

நான்கு முகம் கொண்ட சதுர்முக முருகன்

திண்டுக்கலில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கருவறையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.

மகா மண்டபத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். இத்தகைய நான்கு முகங்கள் கொண்ட முருகனின் தோற்றத்தை நாம் வேறு எந்த தவத்திலும் தரிசிக்க முடியாது. அருகில் பாலதிரிபுரசுந்தரி அம்பிகையும், விஸ்வாமித்திரரும் காட்சியளிக்கிறார்கள்.

முருகப் பெருமான் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்னர் முருகப்பெருமானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அதை நினைவு கூறும் வகையில் இங்கே, முருக பெருமான் சதுர்முகத்துடன் இருப்பதாக தல புராணம் கூறுகின்றது.

குங்குமத துகள்களில் தோன்றிய சதுர்முக முருகன்

விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்காக கடும் தவம் செய்து கொண்டிருந்தார் . அப்போது விசுவாமித்ரர் முன்பாக சிறுமி வடிவில் தோன்றிய பாலதிரிபுரசுந்தரி அம்பிகை, தனக்கு குங்குமப் பொட்டு வைக்கும்படி கேட்க, அந்த சிறுமியின் நெற்றியில் விசுவாமித்திரர் குங்குமப் பொட்டு வைத்தார். அவர் குங்குமம் இட்டதை சரி பார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில், சிறுமி பாலதிரிபுரசுந்தரி தன் பிம்பத்தைப் பார்த்தாள்.

குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. இதனையடுத்து அந்த குளத்தில் இருந்து சதுர்முக முருகன் தோன்றினார்.'இந்த சதுர்முக முருகனே நீ வேண்டும் வரத்தை அருள்வான்' என்று விசுவாமித்ரரிடம் தெரிவித்து விட்டு அந்த சிறுமி மறைந்தாள்.

சதுர்முக முருகனும், சிறிது தொலைவில் உள்ள கோயிலுக்கு வரும்படி தெரிவித்து விட்டு மறைந்தார். விசுவாமித்திரரும் அருகில் உள்ள அந்த கோயிலுக்கு சென்றார். அங்கு பாலதிரிபுரசுந்தரியும், சதுர்முக முருகனும், ஒன்றாகக் காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ந்தார். பின் இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேன் என்று வருந்தினார். அப்போது அங்கு வந்த வசிஷ்டர், விசுவாமித்ரருக்கு 'பிரம்மரிஷி' பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார்.

செம்பால் அபிஷேகம்

இத்தலத்தில் செவ்வாய்கிழமைகளில் காலை சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த 'செம்பால் அபிஷேகம்' செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இப்படிப்பட்ட அபிஷேக நடைமுறை வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கும்; சத்ரு பயம் விலகும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். மற்றும் இங்கே உள்ள பாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்.

படம் உதவி திரு. குணசேகரன், சின்னாளப்பட்டி

See this map in the original post