௳ (முகப்பு)

View Original

திருமலை பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில்

கை விலங்குடன் காட்சி அளிக்கும் பால அனுமன்

திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நேர் எதிரே, சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில். திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள்

இக்கோவிலுக்குச் சென்று ஆசி பெற வேண்டும், பேடி ஆஞ்சநேய சுவாமியின் ஆசீர்வாதம் முழுமையான பயணத்தைக் குறிக்கிறது. ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் மகா துவாரத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில், பேடி ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆஞ்சநேயர், பால அனுமன் தோற்றத்தில், கைகள் கூப்பிய அஞ்சலி முத்திரை கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருக்கின்றது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் பால அனுமன் தனது வாகனமான ஒட்டகத்தைத் தேடி காடுகளில் அலைந்து கொண்டிருந்தார். ஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனாதேவி, பால அனுமானைத் தடுக்கும் முயற்சியில், அவனைக் கைவிலங்கிட்டு, தான் திரும்பி வரும் வரை ஸ்ரீவாரி கோவில் முன் இருக்குமாறு தனது அன்பு மகனுக்கு உத்தரவிட்டதாக புராணம் கூறுகிறது. பின் அஞ்சனா தேவி அருகில் இருந்த மலையில் தவம் செய்ய சென்று விட்டாள். இதனால் தான், திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி, அவள் பெயராலே அழைக்கப்பட்டு வருகின்றது.

தம் அன்பான சீடன் கோயிலின் முன் தனியாக நிற்பதைக் கண்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வர பகவான், ஒவ்வொரு நாளும் பால அனுமனுக்கு சரியான நேரத்தில் உணவை வழங்கவும், அவரது தாயார் அஞ்சனாதேவி, திரும்பி வரும் வரை அவரை நன்கு கவனித்துக் கொள்ளவும் கோயில் குருக்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே ஒவ்வொரு நாளும் ஸ்ரீ பூவராகசுவாமிக்கும், ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கும் நைவேத்தியம் சமர்பிக்கப்படும் அதே நைவேத்தியம் இந்தக் கோவிலுக்குக் கொண்டு வந்து அனுமனுக்குப் படைக்கப்படுகிறது.

See this map in the original post