௳ (முகப்பு)

View Original

திருவாடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்

அம்பாள் பசுவின் வடிவில் சிவபெருமானை வழிபட்ட தலம்

பிரிந்திருக்கும் தம்பதியரை மீண்டும் இணைக்கும் அணைத்திருந்த நாயகர்

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் 20 கி.மீ., தொலையில் அமைந்துள்ள தேவார தலம் திருவாடுதுறை. இறைவன் திருநாமம் கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஒப்பிலாமுலையம்மை.

ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளைப் பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள்.

இத்தலத்தில் தம்மை வழிபட்டுவர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டித் தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார்.'கோ' வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், 'கோமுக்தீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில், சிவபெருமான் பார்வதியை அணைத்திருக்கும் கோலத்தில் காட்சி தரும் 'அணைத்தெழுந்த நாயகர்' உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

இங்கு அம்பாள் ஒப்பிலாமுலையம்மை நின்ற திருக்கோலத்தில் ஒப்பில்லாத அருளும் கருணையும் கொண்டு அழகே உருவாக காட்சி தருகிறார். இங்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அருட்காட்சி தருகிறார் ஒப்பிலாமுலையம்மை. விசேஷ நாட்களில் சந்தன காப்பு அலங்காரத்தில் ஒப்பிலா முலையம்மையின் அழகை காண கண் கோடி வேண்டும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு அம்பாள் சந்நிதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.

See this map in the original post