௳ (முகப்பு)

View Original

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

தேரினை ஆமை இழுத்துச் செல்லும் வடிவமைப்பு - வியக்க வைக்கும் கலைப்படைப்பு

சுழலும் தேங்காய்

தனித்தனியாக சுற்றும் வளையங்களால் இணைக்கப்பட்ட கிளிகள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில், மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.

இக்கோவிலில் உள்ள எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களில், பல்வேறு விதமான அழகிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடு உள்ள சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் எழுந்தருளில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் செங்கோட்டு வேலவர். அவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு, அந்தத் தேரினை ஆமை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும், நாம் காண முடியாத வியக்க வைக்கும் கலை படைப்பாகும்.

இந்த செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்திலும் மற்ற மண்டபங்களிலும் அமைந்துள்ள எல்லா தூண்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்திய சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு விளக்குகின்றன. ஒவ்வொவொரு சிற்பத்தின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்று நம்மை எண்ண வைக்கிறது. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கோவிலின் மண்டப மேற்கூரையில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும், நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த சிற்பத்தில், மேலிருந்து தொங்கும் சங்கிலிகள்,தொங்கும் தாமரைப்பூ,அதன் இதழ்களில் அமர்ந்து,மகரந்தத்தை ருசிக்கும் எட்டு கிளிகள், கிளிகளுக்கு காவலாக வெளியில் நான்கு பாம்புகள் ஆகிய எல்லாமே ஒரே கல்லால் வடிக்கப்பட்டது என்று அறியும் போது நம்மை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் செல்லும்.

இந்த கோவிலின் சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது. சிற்பக் கலையின் உன்னதத்தை உணர்த்தும் எண்ணற்ற நம் கோவில்களில், இக்கோவில் தனக்கென்று தனி இடத்தை பெற்று திதழ்கின்றது

இந்தக் கோவிலை பற்றிய முந்தைய பதிவு

அர்த்தநாரீசுவரர் மூலவராக இருக்கும் தேவாரத் தலம் (17.05.2024)

https://www.alayathuligal.com/blog/65ncst66mmxg8fft6wpas6rczab8el-jdsla

அர்த்தநாரீசுவரர் கோவில் சிற்பங்கள் - பகுதி 1

அர்த்தநாரீசுவரர் கோவில் சிற்பங்கள் - பகுதி 2

படங்கள் உதவி : திரு. L. அண்ணாமலை, கோயம்புத்தூர்

See this map in the original post