௳ (முகப்பு)

View Original

தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

வெண்கல சத்தம் எழுப்பும், காந்தக் கல்லாலான சோடச லிங்கம்

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தென்பொன்பரப்பி என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் சொர்ணபுரீசுவரர். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஒரு காலத்தில் இந்த ஊரில் செல்வம் கொழித்து, பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால், இந்த ஊருக்கு பொன்பரப்பி என்று பெயர் ஏற்பட்டது. இதனால் தான், இத்தலத்து இறைவனுக்கு சொர்ணபுரீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இத்தலத்து இறைவன், சித்தர்களின் தலைமை குருவாகக் கருதப்படும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீகாகபுஜண்டர் சிவதரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டதாகவும், அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களை கொண்ட சோடச லிங்கமாக காட்சி தந்ததாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்து சிவலிங்கத் திருமேனி, காந்தத் தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கமாகும். சுமார் 5.5 அடி உயரத்திற்கு விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. பல சிவாலயங்களில் சோடச லிங்கம் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்.

தன்னை வணங்கும் பக்தர்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்ற பொருளிலேயே இங்குள்ள இறைவன் சோடச லிங்கமாக காட்சிதருகிறார்.

சொர்ணபுரீஸ்வரரின் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ள காந்தக்கல்லானது, நவபாஷாணத்திற்கு ஒப்பானதாகும். இந்த கல்லை கைகளினால் தட்டிப் பார்த்தால் வெண்கலச் சத்தம் எழுவதும், இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இந்த கோயிலானது வாயு தலத்திற்கு இணையானதாக இருப்பதால், இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபமானது, துடித்துக் கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டரின் நாடிச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.

பிரதோஷ வழிபாடு, தேன் அபிஷேக மகிமைகள்

திருமணத்தடையின் காரணமாக நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், 16 பிரதோஷ தினங்களில் தொடர்ந்து ஈசனை தரிசித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திரதோஷம் உள்ளவர்கள் மற்றும் பலவித கிரக தோஷங்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மனபாரம் உள்ளவர்கள், நிலத்தகராறு, பில்லிசூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சொர்ணபுரீஸ்வரரை தொடர்ந்து பிரதோஷ காலங்களில் வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு, கைவிட்டுப் போன சொத்துக்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தேன் அபிஷேகம் செய்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

செவ்வாய், வெள்ளி ஞாயிறு, ராகு காலங்களும் மற்றும் திங்கட்கிழமை, பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களும், தேன் அபிஷேகம் செய்ய உகந்த நாட்களாகும். தோஷமுடையவர்கள் தேன் அபிஷேகம் செய்த தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

இளம் கன்றாகத் தோற்றமளிக்கும் பால நந்தீசுவரர் (31.08.2024)

பால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாகும் அதிசயம்

https://www.alayathuligal.com/blog/thenponparappi31082024?rq

படங்கள் உதவி : திரு. இளங்கோவன், ஆலய பரம்பரை அறங்காவலர்

சோடச லிங்கம்