௳ (முகப்பு)

View Original

ஊட்டி சந்தைக்கடை மாரியம்மன் கோவில்

ஒரே பீடத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன், காளியம்மன்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில், நகராட்சிச் சந்தை பகுதியில் அமைந்துள்ளது சந்தைக்கடை மாரியம்மன் கோவில். கருவறையில் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இருவரும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும். மேலும், இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயமாகும்.

ஊட்டி நகரில் வணிகர்கள், வணிகம் செய்து வந்த காலத்தில் இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களை உடையவர்களாக திகழ்ந்தனர். தெய்வீக மணமும், முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர்.அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து, அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோவில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அதிலிருந்து இக்கோவில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆலயத்தின் மூன்றாவது சக்தியாக, காட்டேரி அம்மன் அருள்பாலித்து வருகிறார். ஆலயத்தின் வலதுபுறம் மூலையில் காட்டேரி அம்மன் சன்னிதி தனியே அமைந்துள்ளது. இந்த அன்னை தீவினைகளை அகற்றும் அம்மனாக இருந்து பக்தர்களுக்கு அருள்கிறார். காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பிணி, பில்லி சூனியம், செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அம்மனிடம் குழந்தைப்பேறு வேண்டுவோர், குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து நேராக இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

உப்பு மழையில் நடைபெறும் தேர் பவனி

சித்திரை மாதம் இங்கு நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்தத் திருவிழா 36 நாட்கள் நடைபெறுவது வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறையாகும். அப்போது அன்னை வெள்ளை நிறப் புடவை அணிந்து, அலங்காரம் செய்யப்பட்டு உலா வருகிறார். தேர் பவனியின் போது நேர்த்திக்கடனாக பக்தர்கள் டன் கணக்கான உப்பைத் தேர் மீது வாரி இறைத்துக் காணிக்கை செலுத்துகிறார்கள். இப்படி உப்பு மழையில் தேர் பவனி நடைபெறுவதை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். உப்பைப் போல தங்களின் குறைகளும், துன்பங்களும் கரைந்து போக வேண்டும் என்பதற்காக, இந்த வேண்டுதலை பக்தர்கள் செய்கிறார்கள்.

See this map in the original post