௳ (முகப்பு)

View Original

சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்

சிருங்கேரி சாரதாம்பிகை

கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சிருங்கேரி சாரதாம்பிகை கோவில். ஆயகலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாக திகழும் சரஸ்வதி தேவிக்கு, நாற்பதுக்கும் அதிகமான திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில கலைமகள், சகலகலாவல்லி, நாமகள், சாவித்ரி, சாரதா ஆகியவை ஆகும். சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள். லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 வது திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். சாரதாராத்யா என்றால் விஷ்ணு, பிரம்மா ஆகியோரால் ஆராதிக்கப்பட்டவள் என்று பொருள். 'சாரத' என்ற சொல்லுக்குப் பண்டிதர்களால் பூஜிக்கப்படுபவர் என்ற அர்த்தமும் உண்டு.

கருவறையில் சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீசக்ர பீடத்தில், கையில் ஜெப மாலையுடன் சிம்மாசனத்தில் மேல் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கைகளில் மேல் வலது கையில் கிளி இருக்கிறது. கீழிருக்கும் வலது கை சின்முத்திரை காண்பிக்கிறது. மேல் இடது கை அமிர்த கலசத்தை ஏந்தியுள்ளது. கீழ் இடது கை புத்தகத்தை வைத்துள்ளது. அமிர்த கலசம் சாகாமையையும், புத்தகம் மேலான அறிவையும் குறிக்கின்றன. ஜெப மாலையோ, பிரபஞ்சம் தோன்றும் விதையாக உள்ளது. பிரம்மனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் உயிரின் விழிப்புணர்வை சின்முத்திரை பிரதிபலிக்கிறது.

சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதாம்பிகை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி, சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி, வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. கோலாகலமாக நடைபெறும் நவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு வந்து, சாரதாம்பிகையை வழிபடுகின்றனர்.

நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம். சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம். சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.

நவராத்தரி  ஒன்பதாம் நாளன்று வெளியான முந்தைய பதிவுகள்

 

1. கொல்லூர் மூகாம்பிகை அம்மன் (04.10..2022)

    https://www.alayathuligal.com/blog/jzt32yatyl88fpfd3j5yg6zj9y5nc8

  

 2. கூத்தனூர் சரஸ்வதி கோவில் (14.10.2021)

    https://www.alayathuligal.com/blog/s44nerac2p3waedbzhth84byfbe7k5

சிருங்கேரி சாரதாம்பிகை மங்கள ஆரத்தி

See this map in the original post