௳ (முகப்பு)

View Original

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கையை ஏற்கும் அம்பிகை

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. கருவறையில் அம்பிகை பாலாம்பிகை தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.

அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். பெண்கள், வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இந்த துவாரபாலகியர்க்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

பார்வதி தேவி அன்னம் வடிவெடுத்து சிவ பூஜை செய்த தலம் இது. அதனால் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள தீர்த்தம் அன்னமாம் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் நல்ல வரன் வேண்டி தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் நம்பிக்கை.

குழந்தைகளின் பாலாரிஷ்டத்தை நீக்கும் பாலாம்பிகை

பால் குடிக்காமல் சதா அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் உள்ளதாகச் சொல்வார்கள். காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள், இங்குள்ள அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளித்தால் பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

பாம்பின் மேல் தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் அபூர்வக் கோலம்

https://www.alayathuligal.com/blog/slp422xzxy9ez9xkaj7sa4yrgdcyn5

See this map in the original post