௳ (முகப்பு)

View Original

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில்

முகத்தில் புனுகு காப்புடன் காட்சி அளிக்கும் பங்காரு காமாட்சி அம்மன்

தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ளது பங்காரு காமாட்சியம்மன் கோவில். பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் இக்கோவிலை கட்டினார். கோவிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். தெலுங்கு மொழியில் பங்காரு என்றால், தங்கம் என்று பொருள்.

கருவறையில் பங்காரு காமாட்சியம்மன், தங்கத்தாலான திருமேனி உடையவளாய், வலது கரம் கிளியை ஏந்தியும், இடது கரம் நளினமாக வளைந்து கீழே தொங்க விடப்பட்டும், மூன்று வளைவுகளோடு வில்போன்ற ஒயிலோடு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் திருமுகத்தில், எப்போதும் புனுகு காப்பு சாத்தப்பட்டு இருப்பதால், கருமை நிறத்துடன் காட்சி அளிப்பாள். பங்காரு காமாட்சி அம்மன் முதலில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்தான் எழுந்தருளி இருந்தாள். பதினெட்டாம் நூற்றாண்டில் அடிக்கடி நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பினால் அச்சம் கொண்ட அப்போதைய காஞ்சி மடாதிபதி, காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து இந்த பங்காரு காமாட்சி அம்மன் விக்ரகத்தை எடுத்துக் கொண்டு பல ஊர்களில் தங்கி இருந்து பின்னர் தஞ்சை வந்தடைந்தார். விக்ரகத்தின் பாதுகாப்பு கருதி அதன் திருமேனியை துணியால் சுற்றி முகத்திற்கு மட்டும் கருமையான புனுகு காப்பு சாத்தி எடுத்து வந்தார்கள். அதன் அடிப்படையில்தான் இப்பொழுதும் அம்மனின் திருமுகத்தில் புனுகு காப்பு சாத்தப்பட்டு வருகிறது.

கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் உற்சவர் காமகோடியம்மன் சன்னதி உள்ளது. மூலவர் பங்காரு காமாட்சி அம்மனுக்கு வருடத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்கள், காமாட்சியின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம், பங்குனி உத்திரம் ஆகிய 11 நாட்கள் மட்டும் தான், அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் உற்சவருக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்தி காமகோடி அம்மனுக்கு கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. அதுபோல கிருஷ்ண ஜெயந்திக்கும் முறுக்கு-சீடை நிவேதனம் செய்கிறார்கள். வைணவ ஆலயங்களைப் போலவே பக்தர்களுக்கு சடாரி சார்த்தும் வழக்கம் இருந்து, இப்போது மறைந்து விட்டிருக்கிறது.

சியாமா சாஸ்திரிகளுக்கு அருள் புரிந்த பங்காரு காமாட்சியம்மன்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் இக்கோவிலில் நித்ய பூஜைகள் செய்யும் பணியில் இருந்து,பின்னர் கீர்த்தனைகள் பாடும் புலமை பெற்றார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேட தினங்களிலும் சியாமா சாஸ்திரிகள் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்வார். அவ்வேளைகளில் அநேக கீர்த்தனைகள் அவர் வாக்கினின்றும் உதித்தன. இக்காரணம் பற்றியே இவரது கீர்த்தனைகளுக்கு தனியான சுவை ஏற்பட்டது என்பர்.

சியாமா சாஸ்திரிகள்

See this map in the original post