௳ (முகப்பு)

View Original

தேவதானம் ரங்கநாதர் கோவில்

வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படும் தேவதானம் ரங்கநாதர் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தேவதானம் கிராமம். பெருமாள் செய்த சேவைக்கு நன்றி செய்யும் விதமாக தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அளித்த தானம் ஆகையால் இவ்விடம் , தேவதானம் என்று பெயர் பெற்றது.

இக்கோவில் வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை விட தேவதானம் பெருமாள் அரை அடி நீளம் அதிகமானவர். இங்குள்ள பெருமாள் சாளக்கிராம கல்லால் ஆனவர். பெருமாள் ,பதினெட்டரை அடி நீளத்தில் 5 அடி உயரத்தில், ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலைத் தலைக்கு வைத்து வடக்கே திருமுகமும், , தெற்கே திருவடியும் வைத்த சயன கோலத்தில் காட்சி தருகிறார் . இவரின் நாபியின் மீது பிரம்மா உள்ளார் . பெருமாளின் பாதத்தின் அருகில் ஸ்ரீதேவி ,பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்கிறார்கள் . அவரின் திருவடியை சேவித்தவாறு தும்புரு மகரிஷியும் ,பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர் . இந்த ரங்கநாதர் திருமேனி முழுதும் சாளக்ராம கற்களால் வடித்த சுதை விக்ரகம் என்பதால் அபிஷேகம் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை தைலக் காப்பு மட்டும் சாத்தப்படும்.

சாளுக்கிய மன்னனுக்கு விவசாயியாக காட்சியளித்த பெருமாள்

ஆயிரம் வருடம் பழமையான இக்கோவில் சாளுக்கிய மன்னரால் கட்டப்பட்டது. சாளுக்கிய மன்னன் ஒருவன் தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தான். ஸ்ரீரங்கத்தை அடைந்த மன்னன், அங்கிருந்த ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்று பெருமாளைத் தரிசித்தான். பெருமாளின் பேரழகில் அப்படியே சொக்கிப் போய் விட்டான். அப்போது தன் நாட்டிலும் இதே போன்ற பேரழகுடன் பெருமாளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.

சாளுக்கிய மன்னன் தேவதானம் கிராமத்திற்கு வந்தபோது, அந்த பகுதி முழுவதும் ஸ்ரீரங்கத்தைப் போன்றே நெல் வயல்கள் நிரம்பி பசுமை போர்த்தி காட்சி அளித்ததைக் கண்டான். அப்போது ஓரிடத்தில் விவசாயி ஒருவர் வயல் களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகளை ஒரு மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். மன்னர் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த விவசாயி மறைத்துவிட்டார். சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் கண்களில் ஓர் இடத்தில் அந்த விவசாயி மரக்காலை தன் தலைக்கு வைத்தபடி படுத்திருந்தார். அருகில் சென்ற மன்னனுக்கு அந்த விவசாயி பெருமாளாகக் காட்சி கொடுத்ததுடன், அந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வேண்டும் என்றும், அந்த ஆலயம் ஸ்ரீரங்கம் போன்று பிரசித்தி பெற்று விளங்கும் என்றும் கூறினார்.

சாளுக்கிய மன்னன், பெருமாளின் திருவுருவம் வடிக்கப் பொருத்தமான கல்லைத் தேடிக்கொண்டே தன் படையினருடன் வட இந்தியாவுக்குச் சென்றான். இமயமலையின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான ஒரு கல்லைப் பார்த்தான். அந்தக் கல்லில் பெருமாளின் திரு உருவத்தை வடிக்க நினைத்து, அந்தக் கல்லை வீரர்களைத் தூக்கச் செய்து தென்னிந்தியாவுக்குப் புறப்பட்டான். வரும் வழியில் வீரர்கள் எடுத்து வந்த கல் தவறி கங்கையில் விழுந்து விட்டது. ஆனால் கல் மூழ்காமல் மிதந்தது. ஆற்றில் விழுந்த கல்லை வீரர்கள் திரும்ப எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஆற்றில் விழுந்து முழுகாத அந்த கல் பற்றி ஆன்மீகப் பெரியோர்களிடம் கேட்டான் மன்னன். அது சாளக்கிராமக் கல் என்றும், அந்தக் கல்லில் இறைவனின் திரு உருவத்தை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அந்த பகுதி முழுவதும் செழிப்பாக இருக்கும் என்றும் கூறினர். பின்னர் தேவதானம் திரும்பிய மன்னன், இறைவன் தனக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை நிர்மாணித்தான். ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெருமாள் பெரியதாக உள்ளதால், இத்தலம் வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது .

பலன்கள்

இந்த ஆலயத்தை சுக்ர ஓரையில் வழிபடுவது மிகவும் விசேஷம். ரங்கநாத பெருமாளை அமாவாசை மற்றும் ஏழு அல்லது பதினோரு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணக்கஷ்டம், திருமணத்தடை போன்றவை தீர்ந்து செல்வச் செழிப்பு, மகிழ்ச்சியான இல்லறம், குழந்தை பாக்கியம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பற்றிய முந்தைய பதிவு

 ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்

https://www.alayathuligal.com/blog/x5zbpw8ldedml3wlypmst5p9zh8caj

படங்கள் உதவி : திரு. கோபிநாத் ராஜு