௳ (முகப்பு)

View Original

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்

ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன்

பாண்டிய நாட்டு 14 தேவாரத் தலங்களில் ஒன்று ராமேசுவரம். இறைவன் திருநாமம் ராமநாதசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி, மலைவளர்காதலி. பர்வதத்தின் (பர்வதம்=மலை) மகள், பர்வத வர்தினி ஆனாள். 'வர்தன' என்னும் சொல்லுக்கு 'வளர்ச்சி, விரிவு' என்னும் பொருள்கள் உண்டு. பர்வத அரசர் (ஹிமவான்) வளர்த்த மகளாக, பர்வத வம்சத்தின் விரிவாக ஓங்கி நிற்பவளுக்குப் பர்வதவர்தினி என்பது திருநாமம். மலையத்துவச மன்னர் (ஹிமவான்) வளர்த்த மகள் என்பதைக் குறிப்பதாக இந்த அம்பிகையை மலைவளர் காதலி (மலை வளர்த்த பாசத்திற்குரியவள்) என்றே திருஞானசம்பந்தரும், தாயுமானவரும் அழைக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி பீடம்.

சுவாமியின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோல நாயகியாக, நான்குத் திருக்கரங்களுடன் அம்பிகை காட்சி தருகிறாள். கீழ்க்கரங்கள் அபயமும், வரமும் காட்ட, மேல் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு இவள் நிற்பதைப் பார்த்தால், 'நானிருக்கிறேன், கவலைப்படாதே' என்று கூறுவது போன்றே தோன்றுகிறது. தாமரை மலர்களைத் தாங்கியவள் என்பதாலோ என்னவோ, நவராத்திரி காலத்தில் தாமரைச் செல்வியான மகாலட்சுமிக் கோலத்திலும் அம்பிகை காட்சி தருவது வழக்கம். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது.

அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இங்கு உள்ள பள்ளியறையில் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் இரவு கால சயன பூஜையும் , அதிகாலையில் நடைபெறும் எழுந்தருளல் பூஜையும் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

அம்பிகை பர்வதவர்தினியிடம் வேண்டிக்கொண்டால், எதுவாக இருந்தாலும் நிறைவேற்றிக் கொடுப்பாள் என்பது பக்தர்களின் நெடுங்கால அனுபவம்.

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதர் காட்சி தருகிறார். இராமர் பூஜித்த அரங்கநாதரைப் பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு அரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த அரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

நவராத்திரி ஐந்தாம் நாளன்று வெளியான முந்தைய பதிவுகள்

 1. திருநெல்வேலி காந்திமதி அம்மன் (30.09.2022)

   https://www.alayathuligal.com/blog/gfkkfl2x49gxrpdfg2lhzla3rj7kj5

 

 2. திருவாரூர் கமலாம்பிகை (10.10.2021)

    https://www.alayathuligal.com/blog/zk6z5ghrez6ekcnc9gg5r373rxmf5a

See this map in the original post