௳ (முகப்பு)

View Original

நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்

யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி இருக்கும் அபூர்வ காட்சி

சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது.

இத்தலம், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வந்த நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிரமாகத் தோன்றினார் நரசிம்மர். அவரை சாந்தமாக இருக்கும்படியும் தான் பெற்ற தரிசனம் மற்றவர்களும் பெற வேண்டும் என்றும் வேண்டினார். அதனால் லட்சுமியை மடியில் ஏந்தி புன்னகைத்த திருக்கோலத்துடன் இங்கு எழுந்தருளினார்.

கருவறையில் மூலவர் லட்சுமி நரசிம்மர், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் சக்கரத்தாழ்வார் தனது 16 கரங்களில் பல்வேறு ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி காட்சி தருவது தனி சிறப்பாகும்.

பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் பிரார்த்தனை சக்கரம்

சக்கரத்தாழ்வார் சன்னதியின் எதிரில் ஒரு சிறு மேடையின் மேல் அமைந்திருக்கிறது பிரார்த்தனை சக்கரம். பிரயோக நிலையில் ஏவப்படுவது போல் காட்சி தரும் இந்த பிரார்த்தனை சக்கரம், இக்கோவிலில் நடந்த அகழ்வாய்வின்போது கிடைத்த பெருமாளின் சிலையில் இருந்தது. இந்த பிரார்த்தனை சக்கரம், இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். பக்தர்கள் பிரார்த்தனை சக்கரத்தை தொட்டு கண்களை மூடி தங்களின் பிரார்த்தனைகளைச் சொல்லிவிடுகிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள் நெய் தீபமிட்டு, நாற்பத்து எட்டு முறை வலம் வந்து ஸ்ரீ சுதர்சனரை வழிபட்டால் இடையூறுகள் மறையும், கவலைகள் நீங்கும் என்பது பலரின் அனுபவமாக உள்ளது.

பிரார்த்தனை சக்கரம்

See this map in the original post