௳ (முகப்பு)

View Original

மாறாந்தை கயிலாயநாதர் கோவில்

தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அபூர்வ காட்சி

திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாறாந்தை கயிலாயநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஆவுடையம்மாள். இத்தலத்து இறைவன் திருமேனியில் பசு மாட்டின் குளம்படி தடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இப்பகுதி முற்காலத்தில், மாறன் தாய நல்லூர் என்று அழைக்கப்பட்டது. 'மாறன்' என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். 'தாயம்' என்பதற்கு 'உரிமை என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை, மக்களுக்கு விட்டுக் கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும்படியாக இப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது மாறாந்தை என அழைக்கப்படுகிறது.

பொதுவாக, ஆலமர்ச் செல்வன் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் நான்கு பேர்களுக்கு கல்லால மரத்தடியில் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி தருவார். இதில் சற்று மாறு பட்ட கோலத்திலும் சில தலங்களில் அருள் புரிகிறார். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சில தலங்களில் திசைமாறியும் எழுந்தருளியுள்ளார். திசைமாறியும், வித்தியாசமான திருக்கோலத்திலும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த நல்ல காரியங்கள் உடனே நிறைவேறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக, இவ்வாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் உள்ளது. பாலபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்து இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவோருக்குச் சிறந்த கல்வி, உயர்பதவி, தொழில் முன்னேற்றம் கிடைக்கின்றன.

See this map in the original post