௳ (முகப்பு)

View Original

ராமநாதீஸ்வரர் கோவில்

சிவனே குருவாக இருந்து ராமருக்கு வழிகாட்டிய தலம்

ராமநாதீஸ்வரர் கோவில் , சென்னை போரூர் சந்திப்புக்கு அருகில் அமைந்து இருக்கிறது. இக்கோவில் மிகவும் பழமையானது.

ராமர் சீதையை தேடி வனத்தில் அலைந்து திரிந்து செல்லும் வேளையில் ஒரு நெல்லி மரத்தின் வேர் ராமரின் காலை இடர, ராமர் உள்ளுணர்வால் வேரின் உள்ளே சிவலிங்கம் இருக்கிறது என்பதை உணர்கிறார்.சிவனின் தலைமீது கால்பட்டதால்,உண்டான தோஷத்தை போக்க ,அங்கேயே தவத்தில் இருந்தார்,நாள் ஒன்றிற்கு ஒரு நெல்லிக்கனியை மட்டுமே உணவாக உண்டு 48 நாட்கள் தவம் மேற்கொண்டார்.முடிவில் வேரின் அடியில் இருந்த லிங்கம் பூமியை பிளந்துகொண்டு வந்து வெளிப்பட,சிவபெருமான் ராமருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார். பரவசத்தில் ராமர் சிவபெருமானை கட்டியணைக்க உடனே சிவலிங்கம் ஆறு அடி உயர அமிர்தலிங்கமாக மாறுகிறது. ராமர் சீதையை தேட வழிகேட்க, 'ராமேஸ்வரம் நோக்கி செல்' என்ற அசரீரி கேட்கிறது.

சிவபெருமான் ராமருக்கு காட்சி அளித்தமையால், இங்குள்ள மூலவர் ஸ்ரீராமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மிகப்பெரிய லிங்கவடிவில் 6 அடி அமைப்பும் மிக அழகிய அலங்காரத்துடனும் கிழக்கு நோக்கி அருள்பலிக்கிறார். இந்த பிரும்மாண்ட லிங்கம் சுயம்புவாக தோன்றியவர். அம்பிகை சிவகாமசுந்தரி தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறார். சிவனே வந்து வழிகாட்டிய காரணத்தால் அவரே குருவாகிறார் . ஆகவே தனியாக குருச்சன்னதி கிடையாது . குருவருள் பெறவும் ,வியாழன் கோள் சம்பந்தமான எந்தவித தோஷத்தையும் போக்கும் தலமாக விளங்குகிறது.

ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து ராமேஸ்வரத்தில் செய்யும் பரிகாரங்களை செய்கிறார்கள். ராமேஸ்வரத்தில் செய்யும் பலன், இத்தலத்திலேயே கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஆகவே இந்த கோவில் உத்திரராமேஸ்வரம் என்றும் கூறப்படுகிறது.

தீர்த்தம் தந்து, சடாரி வைக்கும் சிவன் கோவில்

பொதுவாக பெருமாள் கோவிலில் மட்டுமே பிரசாதமாக கிடைக்கும் தீர்த்தம் , சடாரி போன்றவை சிவன் கோவிலான இங்கும் கிடைக்கும். தீர்த்தம் தந்து, சடாரியும் வைக்கும் சிவன் கோவில் என்பதால் இத்தலம் தனிச் சிறப்பைப் பெறுகிறது. இங்கு சுவாமிக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது மிகவும் விசேக்ஷம். இங்கு பிரசாதமாகத் தரப்படும் நெல்லிக்கனியை உண்டால் ஆயுள் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

See this map in the original post