௳ (முகப்பு)

View Original

துத்திப்பட்டு பிந்து மாதவர் கோவில்

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாள்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை மார்க்கத்தில், ஆம்பூர் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் கோவில். தாயார் திருநாமம் ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார். கருவறையில் ஆறடி உயர திருமேனியுடன் பிந்து மாதவப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கதாயுதத்தை கையில் பிடித்தபடி அருள்பாலிக்கிறார். அவருடைய நான்கு கரங்களில், மேல் இரு கரங்கள் சங்கும், சக்கரமும் தாங்கி இருக்கின்றன. கீழ் இடது கரம் கதாயுதத்தை ஏந்தியுள்ளது. கீழ் வலதுகரம் அபய முத்திரையை அளிக்கிறது.

பஞ்ச மாதவ தலங்கள்

மாதவனைக் காண்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட இவ்வுலகில் ஐந்து மாதவப் பெருமாள்களை ஐந்து திவ்ய திருத்தலங்களில் ஸ்தாபித்தான்.

முதலில் வடநாட்டில் அலகாபாத் நகரின் பிரயாகையில் வேணி மாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பித்தாபுரத்தில் குந்தி மாதவரையும், மூன்றாவதாக தமிழகத்தில் ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும், நான்காவதாக கேரளம் திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும், ஐந்தாவதாக ராமேசுவரத்தில் சேது மாதவரையும் ஸ்தாபித்து, வழிபட்டு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி அடைந்தான் என்பது ஐதீகம். அதோடு, இந்த பஞ்ச மாதவப் பெருமாள் கோவில்களுக்கு யாரெல்லாம் தலயாத்திரை செல்கிறார்களோ, அவர்களின் எல்லாவித பாப, சாப தோஷங்களும் நீங்க வேண்டுமென பெருமாளிடம் வேண்டிக்கொண்டான். அதற்கு பெருமாளும் அருள் பாலித்தார்.

மாங்கல்ய தோஷம், நாகதோஷம் நீக்கும் தலம்

வாழ்நாளில் ஒரு முறை பஞ்ச மாதவப் பெருமாள் தலங்களை தரிசனம் செய்தாலே, செய்தவர்களுக்கு சொர்க்கமும், மோட்சமும் நிச்சயம் கிட்டும் என்பது புராண வரலாறு. புத்திர பாக்யம் இல்லாதவர்கள் விரதம் இருந்து இந்த மாதவர்களில் யாரையாவது ஒரு வரை தரிசனம் செய்தால் புத்திர பாக்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் அமாவாசை, பௌர்ணமி, சனிக்கிழமை, ரோகிணி- திருவோணம் -சுவாதி நட்சத்திரங்கள் ,பிரதி மாத ஏகாதசி திதிகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள். இத் திருதலத்தில் உள்ள நாக கன்னிகைகளுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்து, ஐந்தாவது வெள்ளிக்கிழமை மாங்கல்யம் சாத்தி வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் நாக கன்னிகைக்கு நெய் தீபம் ஏற்றி, ஏழுமுறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். பின் பிந்து மாதவரை சென்று வணங்கினால் தோஷம் நீங்கி விடும்.

See this map in the original post