௳ (முகப்பு)

View Original

திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் கோவில்

மஞ்சள் சரடு கையில் ஏந்தி மாங்கல்ய பாக்கியம் அருளும் மங்களாம்பிகை

கும்பகோணத்தில் - மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருமங்கலகுடி. இறைவன் திருநாமம் பிராணநாதேஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளிய மங்களாம்பிகை

முதலாம் குலோத்துங்கச் சோழனிடம் மந்திரியாக இருந்தவர் அலைவாணர். இவர் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, மன்னனின் அனுமதியைப் பெறாமல், திருமங்கலக்குடியில் சிவன் கோவிலைக் கட்டினார். இதை அறிந்த மன்னன், மந்திரியை சிறைபிடித்து, சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். தன்னை சிரச்சேதம் செய்தாலும், உடலை திருமங்கலக்குடியிலேயே தகனம் செய்யும்படி மன்னனுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார், அலைவாணர். அதன்படி சிரச்சேதம் செய்யப்பட்ட அவரது உடல், திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மந்திரியின் மனைவி, தன் கணவர் கட்டமைத்த கோவிலில் வீற்றிருக்கும் அன்னையிடம் சென்று, தன் கணவரின் உயிரைத் திரும்பத் தருமாறு வேண்டினாள். அந்த நேரத்தில் அம்மன் கரு வறையில் இருந்து, 'உன் வேண்டுதல் பலிக்கும்' என்று அசரீரி கேட்டது. அதன்படியே மந்திரியின் தலை ஒன்றிணைந்து, உயிர் வரப் பெற்றார். உயிர்பெற்றதும் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். மந்திரிக்கு உயிர் அளித்த காரணத்தால், இறைவன்- பிராணநாதேஸ்வரர் என்று திருநாமம் பெற்றார். மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளியதால், அம்பாள்- மங்காளம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.

தீர்க்க சுமங்கலியாக வாழ வரமருளும் மங்களாம்பிகை

அம்பாள் மங்களாம்பிகை தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இந்த அம்பிகை மிகச் சிறந்த வரப்பிரசாதியாக திகழ்கிறாள். அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஜாதகங்களில் சொல்லப்படும் தோஷங்களில் கடுமையானது மாங்கல்ய தோஷம். அந்த தோஷத்தைப் போக்கி வளமான வாழ்வை அளிப்பவர் இந்த மங்களாம்பிகை. அம்பிகையை தீபங்கள் ஏற்றி வழிபடுவது, 11 ஞாயிற்றுக் கிழமை வழிபடுவது, ஏழு வெள்ளிக்கிழமை வழிபடுவது என்று பலப்பல பிரார்த்தனை முறைகள் உள்ளன. எந்த வகையான வழிபாடு மேற்கொண்டாலும் அதற்கான பலன் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மங்களாம்பிகையின் நவராத்திரி அலங்காரம்

நவராத்திரியின்போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள்செய்வார்கள். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் மங்களாம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும்.

மீனாட்சி அலங்காரம்

See this map in the original post