௳ (முகப்பு)

View Original

புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

புற்று வடிவில், நிறைமாதக் கர்ப்பிணி போல் காட்சி தரும் மாரியம்மன்

சென்னையில் இருந்து 38 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது புட்லூர் புற்று மாரியம்மன் ஆலயமான, அங்காள பரமேஸ்வரி கோவில். மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி முதல் சக்தி பீடத்தில் அமர்ந்து புற்று ரூபத்தில் பல இடங்களில் கோயில் கொண்டருளி அருள் பாலித்து வருகின்றாள். இங்கே புட்லூரில், பூங்காவனத்தம்மன் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றாள்.

பொதுவாக அம்மனை நாம் நின்ற திருக்கோலத்திலோ அல்லது அமர்ந்த திருக்கோலத்திலோ தரிசிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் புற்று வடிவில் எழுந்தருளி இருக்கும் பூங்காவனத்தம்மன், ஓர் கர்ப்பிணிப் பெண் போல, மல்லாந்து காலை நீட்டி படுத்த நிலையில், வயிறு நிறைமாதக் கர்ப்பிணி போல் இருக்க, வாய் பிளந்தபடி அருட்காட்சி தருகிறாள். இந்த சுயம்பு புற்று முழுவதும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகின்றாள். இந்த மண்புற்று மாதாவுக்கு அப்பால், அங்காள பரமேஸ்வரி சூலம் தாங்கி கருவறையில் எலுமிச்சை மாலைகள் தாங்கி அருள் பாலிக்கின்றாள்.

பிரார்த்தனை

பொதுவாக, இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.

அம்மன் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடப்பதற்கு முன் அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துகின்றனர். ஐந்து, ஏழு, ஒன்பது மாதங்களில் இந்த சீமந்தவழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த வழிபாட்டில் வளையல், பூச்சூட்டி சடை முடித்து ஏழுவிதமான கலவை சாதங்கள் செய்து அம்மனுக்கு படையல் இடுகின்றனர்.

See this map in the original post