௳ (முகப்பு)

View Original

வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்

திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பைரவர்

காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்.வைரவன்பட்டி திருத்தலம். இறைவன் திருநாமம் வளரொளி நாதர். சிவபெருமான், சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இந்த பெயர் வந்தது.இறைவியின் திருநாமம் ஸ்ரீவடிவுடைநாயகி. இக்கோவிலில் ஸ்ரீவளரொளி நாதரும், ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர். ஸ்ரீபைரவருக்கு வயிரவர், வைரவர் என்ற பெயர்களும் உண்டு. இறைவனுக்கும் இறைவிக்கும் அடுத்து பிரதான தெய்வமாக ஸ்ரீவயிரவரே இங்கு வழிபடப்படுகிறார்.

சம்பகாசுரன் என்னும் அசுரனை அழிக்க, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்தான் ஸ்ரீபைரவ மூர்த்தி. சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீபைரவர் உருவாக்கிய தீர்த்தம் அவர் சன்னதிக்கு எதிரே உள்ளது. இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்று அழைக்கிறார்கள். இந்த பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். ஸ்ரீபைரவர் சந்நிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இந்த 12 ராசிகளையும் கட்டுப்படுத்தும் மூலவராக ஸ்ரீபைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.

குழந்தை வரம் தரும் விருட்சம்

இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து 3 புதன்கிழமை அல்லது சனிக்கிழமைகள் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்; இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம். மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம் என்று கருதப்படுகிறது.

See this map in the original post