௳ (முகப்பு)

View Original

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

பாயாச நிவேதனத்தை சிறுவர்கள் உருவில் வந்து ஏற்கும் முருகன்

தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.

படிப்பாயசம் நிவேதனம்

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார்.

குழந்தை பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் மழலை பேறு கிட்டும். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பாயாசத்தை நிவேதனமாக படைத்து அதனை கோவிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி சிறுவர்களை அருந்த சொல்கிறார்கள். இதனை படிப்பாயாச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயாச நிவேதனத்தை ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தல விருட்சங்கள்

https://www.alayathuligal.com/blog/-5

See this map in the original post