௳ (முகப்பு)

View Original

சேங்காலிபுரம் பரிமள ரங்கநாதர் கோவில்

பெருமாள் ஒருக்களித்த நிலையில் சயனித்திருக்கும் அபூர்வ கோலம்

திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ள குடவாசலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது சேங்காலிபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பரிமள ரங்கநாதர் கோவில். முன்னர் இந்த ஊரின் பெயர் திருக்கலீஸ்வரம் என்று இருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னனின் படை தளபதியான அரவான் ராஜராஜன் என்பவர் சாளுக்கிய மன்னனான ஜெயசிம்மனை தோற்கடித்ததினால், இந்த ஊரை அவருக்கு பரிசாக மன்னன் கொடுத்து விட, இந்த ஊரின் பெயர் ஜயசிங்ஹ குலகாலபுரம் என ஆயிற்று. நாளடைவில் அதுவே சேங்காலிபுரம் என மருவியது.

இத்தலம் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் ஆகும். இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அந்த கோவில்களை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம்,

பொதுவாக அனைத்து கோவில்களிலும் சயன கோலத்தில் காணப்படும் பெருமாள், ஆகாயத்தை நோக்கி படுத்த நிலையில் காணப்படுவார் . ஆனால் இங்குள்ள பெருமாளோ சயன கோலத்தில் இருந்தாலும், தனது முகம் உட்பட முழு சரீரத்தையும் பக்தர்களுக்கு காட்டி அருள் பாலிக்கும் வகையில் சயன கோலத்தில் காட்சி தருகின்றார் என்பது ஒரு அதிசய காட்சியாகும். தனது ஒரு கைமீது தலையை வைத்து படுத்தபடி சயன கோலத்தில் உள்ளார். பூமி மீது நேரடியாக தலையை வைத்துக் கொண்டு படுக்கலாகாது என்பது ஒரு நெறிமுறை என்பதினால், அதை தவிர்க்கவே, தனது ஒரு கையின் மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உள்ளார்.

வலது காலில் ஆறு விரல்கள் உள்ள பெருமாள்

இத்தலத்து பெருமாளுடைய வலது காலில் ஆறு விரல்கள் உள்ளன. அதை தரிசிப்பவர்களுக்கு பெரும் அதிருஷ்டம் வரும். மேலும், ஆறாவது விரல், கலியுகத்தில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது.

ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய இருவரும் 'இங்கேயே இரு' என்ற பாவனையில் கைகளை வைத்து இருக்கும் அபூர்வ தோற்றம்

தசரத சக்ரவர்த்தி தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பல கோவில்களில் யாகங்கள், பூஜைகள், பரிகாரங்கள் செய்தார். இந்த தலத்திற்கும் வந்திருந்து ஒரு வருடம் பூஜைகள் செய்தார். ஆனால் பலன் கிடைக்காமல் இருக்கவே, இந்த தலத்திருந்து வருத்தத்துடன் திரும்பிப் போகையில், அவர் முன் தோன்றிய ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி 'உனக்கு அனுக்கிரகம் கிடைக்கும் வேளை வந்து விட்டதினால் இன்னமும் சற்றே இங்கிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க, பெருமாளை தோத்திரம் செய்' என அழைத்தார்கள். அந்த நிலையில் இங்கேயே இரு என கூறும் வகையில் காட்சி தரும் கைகளுடன், இரு தேவிகளும் காணப்படுகின்றார்கள். அந்த தேவிகளின் கைகளை உற்றுப் பார்த்தால் இந்த காட்சியைக் காணலாம். பிற கோவில்கள் அனைத்திலும் உள்ள இரு தேவிகளும் கைகளில் பூ அல்லது ஆயுதங்களோடு காட்சி தர இங்கு மட்டுமே ' இங்கு இன்னும் சற்று இரு' என கூறுவது போன்ற நிலையில் உள்ள கைகளோடு காட்சி தருகிறார்கள். அதைக் கேட்டு படுத்திருந்த பெருமாள் அங்கேயே நின்றிருந்த தசரதரை நோக்கி சற்றே ஒருக்களித்து படுத்துக் கொண்டு 'தசரதா, நான் உன்னுடைய தவத்தினால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும் இன்னமும் உனக்கு உள்ள பாவங்களை தொலைத்துக் கொள்ள சில புண்ணிய காரியங்களை செய்ய வேண்டி உள்ளது. அவற்றையும் நீ செய்து முடித்தப் பின்னர், நானே உனக்கு புத்திரனாக பிறப்பேன்' என கூறினாராம்.

See this map in the original post