௳ (முகப்பு)

View Original

கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில்

சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேஸ்வரர்

தஞ்சையிலிருந்து சாலியமங்கலம் வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில், சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் கோயில் வெண்ணி. இறைவன் திருநாமம் வெண்ணிகரும்பேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. கரிகால் சோழன், பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி வாகை சூடிய இடம் என சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'வெண்ணிப் பரந்தலை' என்ற ஊர் இதுதான்.

கரும்பு கட்டாலான ஈஸ்வரர்

சோழ மன்னன் முசுகுந்த சக்கரவர்த்திதான் தேவேந்திரனிடமிருந்து தியாகராஜ சுவாமியைப் பெற்று வந்து திருவாரூரில் பிரதிஷ்டை செய்தவர். ஒருமுறை திருவாரூரில் இருந்து தஞ்சைக்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் இரு முனிவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். ஒரு முனிவர், 'இந்த இடம் கரும்புக் காடாக இருப்பதால், இதன் தல விருட்சம் கரும்பு' என்றும், மற்றொருவர், 'இல்லையில்லை. இது நந்தியாவட்டம் (வெண்ணி) நிறைந்த இடம். எனவே, நந்தியாவட்டம்தான் தல விருட்சம்' என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர். இவர்களுடைய விவாதத்தைக் கேட்ட மன்னர், 'இந்த இடத்தில் ஆலயமே இல்லையே. இவர்கள் இருவரும் தல விருட்சம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே!' என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென ஓர் அசரீரி ஒலித்தது. 'கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவட்டம்!' என்று இறைவனின் குரல் ஒலித்தது.சிவலிங்கம் கிடைத்த இடத்தில் உடனே கோயில் கட்ட முடிவு செய்தார் உடனடியாக அந்த இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது, லிங்க பாணம் வெளிப்பட்டது. அப்படித் தோண்டும்போது மண்வெட்டியால் விழுந்த வெட்டுத் தழும்புதான் இப்போதும் அவருடைய திருமேனியில் காணப்படுகிறது. சக்கரவர்த்தி. லிங்கம் இருந்த இடத்தில், அடியில் தோண்டத் தோண்ட அந்த பாணம் போய்க்கொண்டே இருந்ததாம். எனவே, சிறிது உயரமாகவே கட்டலாம் என நினைத்து, 20 அடி உயரத்தில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்.

கருவறையில் கரும்பே உருவாய் காட்சி தருகிறார் மூலவர். 'திருமேனி கரும்புக் கட்டுடைத்து' என்று திருமூலர் பாடியுள்ளபடி, கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கேற்றாற்போல், கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர் இந்த மூலவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது. பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, சதுர் அஸ்த்ர (நான்கு மூலைகளை உடைய சதுர) வடிவமுடையது. இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது. மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால், கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால், அபிஷேகம் கூட மூலவரின் திருமேனியை ஒற்றி எடுப்பதுதானாம்.

சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை

சித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார். 'ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்' என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால், இன்றைய விலை வாசியில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம்/சர்க்கரை கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை.

அமெரிக்காவில் மிக பிரபலமான, இதயநோய் நிபுணர் ஒருவர் சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமியைத் தரிசித்து சென்றார். அமெரிக்கா சென்றதும் வழக்கமான சுகர் டெஸ்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு, வழக்கத்துக்கு மாறாகக் குறைந்திருக்கின்றதென்று ரொம்ப ஆச்சர்யப்பட்டார்களாம். சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் கரும்பேஸ்வரரை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை அவர் எடுத்துக் கொள்கிறார் என்பது நம்பிக்கை.

See this map in the original post