௳ (முகப்பு)

View Original

பொரவாச்சேரி கந்தசாமி கோவில்

அழகு மிளிரும் முருகப்பெருமானின் அபூர்வ திருமேனி

நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் தலத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது பொரவாச்சேரி கந்தசாமி கோவில்.

முருகன் என்றால் அழகு. அதற்கேற்றாற்போல் சொக்க வைக்கும் அழகுடன் முருகப்பெருமான், ,இத்தலத்தில் கந்தசாமி என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வயானை சகிதமாக அருள் பாலிக்கிறார். இவர் ஆறுமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும், கொண்டு, அலங்கார ஆபரணம் அணிந்து மயில் மீது அமர்ந்திருக்கும் இந்த முருகப்பெருமானின் விக்கிரகம் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. சிலாமூர்த்தத்தின் முழு எடையையும், அதாவது முருகப்பெருமான், மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் அந்த மயிலின் கால்கள் தாங்கி உள்ளன என்பது வியப்பாக உள்ளது. மேலும் வியப்பளிக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் ஆறுமுகப் பெருமானின் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இங்குள்ள சன்னதியின் அமைப்பின் காரணமாக நாம் மிக அருகில் சென்று மயிலின் கால் நகம், முருகப்பெருமானின் இடது புறங்கையில் ஓடும் பச்சை நரம்பு உட்பட அனைத்து சிறப்பம்சங்களையும் தரிசிக்க முடியும்.இத்தகைய அழகு மிளிரும் சிற்பத்தை நாம் காண்பது அரிது.

பொரவாச்சேரி முருகப்பெருமான் சிலையை வடித்த அதே சிற்பிதான், எட்டுக்குடி மற்றும் எண்கண் தலங்களுக்கும் இதே போன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை வடித்துக் கொடுத்திருக்கிறார்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்

செவ்வாய் தோஷம் நீங்கவும்,குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கவும், சத்துருக்களின் தொல்லை நீங்கவும் இங்கே உரியமுறையில் வழிபாடுகள் செய்யப்படுகிறது. செவ்வாய் தோஷம் நீங்கச் செவ்வாய்க்கிழமையன்று பாலாபிஷேகம் செய்ய வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க இக்கோயிலில் சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்யலாம்.

குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையன்று பாலபிஷேகம் செய்து செவ்வரளி மலர் சாத்தி செவ்வாழை பழத்தோடு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் மூலமாகக் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

See this map in the original post