௳ (முகப்பு)

View Original

தவளகிரி தண்டாயுதபாணி கோவில்

சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் அணிந்த முருகன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கொடிவேரி செல்லும் சாலையில் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது தவளகிரி தண்டாயுதபாணி கோவில். தவளகிரி மலை ஏறிச் செல்ல 270 படிகள் கொண்ட பாதையும், வாகனங்கள் செல்ல தார்ச் சாலையும் உள்ளன.

கருவறையில் தண்டாயுதபாணி சுவாமி, மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும், இடது கையினை இடுப்பில் வைத்தும் அழகு ததும்ப காட்சி தருகிறார். இவரின் இடது கை சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் உள்ளது. இது மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 'தர்ஜனி' என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனியில் முருகர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும், அங்கு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி சண்முகநதி பாய்வதும் போல் இங்கும் தண்டாயுதபாணி மேற்கு நோக்கியுள்ளார், பவானி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் பழனி சென்ற பலனை இத்தலத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

துர்வாசர் பிரதிஷ்டை செய்த தலம்

துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து விட்டு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி நதியினை அவர் கடக்கும் போது வெள்ளம் அதிகரித்தது. திடீரென பெருகிய ஆற்று வெள்ளத்தில் அவர் சிக்கித் தத்தளித்தபோது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்துள்ளது. முருகப் பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்று உணர்ந்தார் துர்வாசர். உடனே மெய்சிலிர்த்து நீந்தியபடியே கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார். ஆற்றில் வெள்ளம் பெருகியபோது முருகனே மயில் மூலமாக அருகில் குன்று இருப்பதை உணர்த்தியதோடு மனம் தளராத தைரியத்தையும் தனக்குக் கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து, அதற்கு நன்றிக்கடனாக மலையின் உச்சியில் முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

கன்னிப் பெண்களாக, தவக்கோலத்தில் காட்சி அளிக்கும் வள்ளி, தெய்வயானை

வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னிப் பெண்களாக, தவக்கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார்கள். வேறு எந்த தலத்திலும் வள்ளியும், தெய்வானையும் கன்னிப்பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவதில்லை. திருமணத்தடையுள்ள கன்னிப் பெண்கள் வள்ளிக்கும், தெய்வானைக்கும் பட்டுப் பாவாடை சாத்தி மன முருக வேண்டிக் கொண்டால் அந்தத் தடை நீங்குவதாக ஐதீகம்.

பிரார்த்தனை

திருமணத்தடையை நீக்குவது, பில்லி, சூனியம், தொழில் விருத்தி, செவ்வாய் தோஷம், விரோதி நிவர்த்தி, வியாபார விருத்தி ஆகிய பரிகாரம் செய்ய உகந்த கோயிலாக இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள வள்ளி, தெய்வானைக்கு 21 விளக்கு வைத்து பூஜைகள் செய்தால் திருமணத்தடைகள் நீங்கும்.

வேடன் அலங்காரத்தில் முருகன்

தவக்கோலத்தில் காட்சி அளிக்கும் வள்ளி, தெய்வயானை

See this map in the original post