௳ (முகப்பு)

View Original

ஆயிரங்காளியம்மன் கோவில்

ஐந்த ஆண்டிற்கு ஒரு முறை தரிசனம் தரும் அம்மன்

பாண்டிசேரி மாநிலம் காரைக்காலிற்கு அருகில் திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ளது ஆயிரங்காளியம்மன் கோவில்.

ஆயிரங்காளியம்மன் தல வரலாறு

அன்னை ஆயிரங்காளியம்மன் திருமலைராயன்பட்டினதிற்கு தானாக வந்தவள் ஆவாள். திருமலைராயன் எனும் அரசன் முதலில் தஞ்சைப் பகுதியை ஆண்டு வந்தான். பின்னர், இந்தப் பட்டினத்திற்கு தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். அவன் உருவாக்கிய நகரமாதலால் திருமலைராயன் பட்டினம் என்றழைக்கப்பட்டது.

முற்காலத்தில் வடதேசத்து மன்னன் ஒருவன் அன்னை காளியை திருவுருவம் வைத்து பூசித்து வந்தான். அன்னைக்கு எதை படைத்தாலும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் படைத்து பூசித்தான். அவனுக்கு மனமிரங்கிய அன்னை காளி அவன் தேசம் செழிப்புடன் விளங்க அருள் புரிந்தாள். மன்னனின் இறுதிக் காலம் நெருங்கிய போது தன்னை ஒரு பெட்டியில் வைத்து கடலில் போட்டு விடும்படி ஆணையிட்டாள். பின் மன்னன் முன் ஒரு பேழை தோன்றியது அதில் அன்னையை வைத்து. வங்க கடலில் விட்டுவிட்டு. மன்னன் அன்னையின் திருவடி அடைந்தான்.

அன்னை காளி இருந்த பேழையும், மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன்பட்டினம் வந்தது. அருகில் இருந்த மீனவர்கள் பெட்டியை எடுக்க முயற்சித்தும் எடுக்க முடியவில்லை.

அன்றிரவு செங்குந்த முதலியார் மரபினரின் மூத்த சிவநேசர் ஒருவரின் கனவில் தோன்றி. தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்து பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.

விடிந்ததும் அவரும் ஊராரிடம் நடந்தவற்றை கூறி மேள தாள வாத்தியங்களோடு கடற்கரைக்கு அனைவருடனும் சென்றார். அவர் வந்தவுடன் யாருக்கும் அகப்படாத பெட்டி வேகமாக அவருக்கு அருகில் வர அவரும் பேழையை அணைத்து தூக்கி வந்தார். பின் அவ்வூரில் உள்ள தேவார வைப்புத் தலமான ராஜ சோழீஸ்வரமுடையார் கோவில் கீழ வீதி மடத்தில் பேழையை வைத்து திறந்தனர். அதில் அன்னையின் அற்புதமான திருவுருவமும் ஒரு ஓலையும் இருந்தது. அந்த ஓலையில்

"அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்

இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள்,

அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்

எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்

ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை

திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!"

என்று இருந்தது.

அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில்தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.

பேழையில் இருந்து வெளிப்படும்போது ஏற்படும் அதிசய நிகழ்வுகள்

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதம் வளர்பிறை பட்சத்தில் திங்கட்கிழமை இரவில் அம்மன் இருக்கும் பெட்டியை திறப்பார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் கலீர் என்று கேட்கும். அதன் பின்பே பேழை திறக்கப்படும். ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும். மலர்ப் பாதங்களில் சிலம்பும், வளைக்கரங்களும், பட்டாடையும் நெற்றியில் திலகமோடு அழகுத் திருமுகத்துடன் காளியன்னை வீர வடிவம் கொள்கிறாள். மாதுளம்பூ மேனி கொண்ட அம்மனின் கம்பீரமான தோற்றத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். வீரகோலம் பூணுவதாலேயே வீரமாகாளி என்று அழைக்கப்படுகிறாள்.

ஆயிரம் எண்ணிக்கையில் சீர்வரிசைப் பொருட்கள்

மறுநாள் செவ்வாய்கிழமையன்று ஒவ்வொரு செங்குந்த குடும்பப் பெண்டிரும் காளியம்மன் மடத்திலிருந்து புதுப்பானையைப் பெற்று தங்கள் இல்லத்திலிருந்து பொங்கல் பொங்குவதற்கு உண்டான பொருள் யாவும் கொண்டு வந்து மடத்தினில் பொங்கல் வைப்பார்கள். இதனிடையே அன்று மாலை ஆறு மணிக்கு அபிராமி உடனுறை ராஜசோளீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து காளியம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருவார்கள். மாலைகள் ஆயிரம், கனிகள் ஆயிரம், தின்பண்டங்கள் ஆயிரம், இளநீர் ஆயிரம், மஞ்சள் ஆயிரம் என பலவகையான நிவேதனப் பொருட்கள் சீர்வரிசையில் இடம் பெறும்.

சீர்வரிசைப் பொருள்களை ஏற்றி வரும் ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வந்து கொண்டிருக்கும். வானத்திலிருந்து இந்த வரிசை ஊர்வலத்தைப் பார்த்தால், நீண்ட நெடிய ஆற்றில் நிவேதனங்கள் மிதந்து செல்வது போலிருக்கும். காளியம்மன் கோயிலை அடைந்ததும் சித்ரான்னங்கள் உள்ளிட்ட அனைத்தும் தேவியின் முன்பு சமர்ப்பிக்கப்படும். அன்னைக்கு படையல் போட்டு முடித்ததும் தீபாராதனை காட்டப்படும்.

அடுத்து புதன், வியாழக் கிழமை இரண்டு நாட்கள், இரவு பகலாக தொடர்ந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் அன்னையை தரிசித்தபடி இருப்பர். பிரசாதங்கள் நிவேதிக்கப்பட்டும், தொடர்ந்து விநியோகம் செய்தபடியும் இருக்கும். அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் விதம் பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தபடி இருப்பார்கள். வெள்ளிக்கிழமை விடிவதற்குள் அன்னையை மீண்டும் பெட்டிக்குள் வைத்து விடுவார்கள்.

கேட்ட வரம் தரும் ஆயிரம் காளியம்மன்

அன்னை ஆயிரங்காளி தனது பக்தர்கள் துயர் தீர்க்கும் கற்பக விருட்சமாக கோவில் கொண்டுள்ளாள். இவளிடம் என்ன வரம் கேட்டாலும் வழங்குகிறாள். பக்தர்களும் தங்களால் இயன்றதை ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை ஆக்குகின்றனர்.

இந்த ஆண்டு மீண்டும் ஆயிரங்காளியம்மன், ஜூன் மாதம் 6ம் தேதி திங்கட்கிழமை பேழையிலிருந்து வெளி வருகிறாள்.

தகவல் உதவி : திரு. செழியன, புதுச்சேரி

ஆயிரங்காளியம்மன் சீர்வரிசை காணொளி காட்சி

See this map in the original post