௳ (முகப்பு)

View Original

புழுங்கல் வாரிப் பிள்ளையார் கோவில்

புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் ஏற்பட்ட வரலாறு

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் ஈசான திசையில் காட்சி தருகிறார் புழுங்கல் வாரிப் பிள்ளையார். ஒரு சந்தர்ப்பத்தில் கோவில் நைவேத்யத்திற்குப் புழுங்கல் அரிசி தட்டுப்பாடு ஏற்படவே, இவர், புழுங்கல் அரிசியை மழை போல் வாரித் தந்தவராம் இவர். அதனால் இவருக்கு புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் வந்தது.

முன்னொரு காலத்தில் திருவில்லிப்புத்தூர் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஊரில் எஞ்சிய சில மக்களுக்கும் சமைக்க அரிசி கிடைக்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு வரகரிசியையே சமைத்து உண்டனர்.அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், தனக்கு உணவு கிடைக்காத நிலையிலும், பிள்ளையாரின் நைவேத்தியத்திற்கு அரிசி கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினார். அதனால் ஊர் மக்களிடம் நைவேத்தியத்திற்காக அரிசி தருமாறு வேண்டினார். ஆனால் மக்களோ, தாங்களே உணவிற்கு வரகரிசியைத்தான் உபயோகப்படுத்தும்போது பிள்ளையாருக்கு எப்படி அரிசி அளிக்க முடியும் என்று வினவினர்.இதனால் மனம் வருந்திய பெரியவர் பிள்ளையாரிடம் கண் கலங்கி நின்றார். பெரியவருக்காக மனமிரங்கிய பிள்ளையார், இரண்டு மரக்கால் புழுங்கல் அரிசியை சன்னதியில் வைத்து அருளினார். இதைக் கண்ட பெரியவர் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து விட்டு, தானும் உண்டு மகிழ்ந்தார்.

இதைக் கணட ஊர் மக்கள் அவருக்கு எப்படி பஞ்ச காலத்தில் புழுங்கல் அரிசி கிடைத்தது என்று வினவினார்கள். பிள்ளையார் தனக்கு அருளியதைச் சொல்ல விரும்பாத பெரியவர் மௌனம் சாதித்தார். இதனால் கோபமடைந்த மக்கள் அவரைக் கட்டி வைத்து துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

தன் பக்தரைக் காப்பாற்ற விரும்பிய பிள்ளையார், அன்றிரவு ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றி தான்தான் அரிசி வழங்கியதாகவும், அந்தப் பெரியவர் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று கூறியருளினார். இதையறிந்த ஊர் மக்கள் மனம் வருந்தி, பெரியவரிடம் மனினிப்புக் கேட்டார்கள்.அவரையே பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.அவர் பரம்பரையினரே இன்றும் இக்கோவிலில் பூஜை செய்கின்றார்கள். அன்றிலிருந்து இப்பிள்ளையார் புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்றும் புழுங்கல் அரிசிப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.