௳ (முகப்பு)

View Original

மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில்

ஒரே கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் அருள்பாலிக்கும் அபூர்வ தோற்றம்

மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மேலப்பாதி என்ற கிராமம். இங்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. செம்பனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இக்கோவில். கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி இரண்டு ஆஞ்சநேயர்கள் ஒரே கருவறையில் அருள்பாலிப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

தல வரலாறு

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் செம்பனார் கோவிலுக்கும், மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் இறங்கிச் செல்லும் நிலை இருந்தது. எனவே அந்தப் பகுதி மக்கள் ஆற்றில் மூங்கில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த மக்களுக்கு இரண்டு மனித குரங்குகள் உதவி செய்தன. ஒரு நாள் பாலம் கட்டிய சோர்வில் இரண்டு குரங்குகளும் அருகில் இருந்த இலுப்பைக் காட்டு திடலில் ஓய்வு எடுத்தன. சிறிது நேரத்தில் அவை இரண்டும் அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டதாக இந்தக் கோவில் தல புராணம் தெரிவிக்கிறது. இதை கண்ட கிராம மக்கள், ஆஞ்சநேயரே இந்த குரங்குகளின் வடிவில் வந்து தங்களுக்கு பாலம் கட்ட உதவியதாக கருதினர். எனவே அந்த மக்கள், இதனால் அந்த குரங்குகள் ஐயக்கிமான இடத்திலேயே இரட்டை ஆஞ்சநேயர் கோவிலை எழுப்பினர்.

பிரார்த்தனை

இந்த ஆஞ்சநேயரிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது இரட்டிப்பு பலனை தரும் என்பது நம்பிக்கை. பொதுவாக விநாயகரை வணங்கி விட்டு பணிகளை துவங்குவது போல், இப்பகுதி மக்கள் இரட்டை ஆஞ்சநேயரை வணங்கி விட்டு தான் எந்த காரியத்தையும் துவக்குகிறார்கள்.

இங்குள்ள ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல இன்னல்கள் தீரும். சனி பகவானின் தாக்கம் குறையும். எடுத்த காரியங்கள் வெற்றி யாகும். எப்படிப்பட்ட தோஷமும் விலகி விடும்.நவகிரக தோஷங்கள் எதுவானாலும் இந்த தல இரட்டை ஆஞ்சநேயரை வழிபட விலகி விடும். அமாவாசை நாட்களில் இந்த ஆஞ்சநேருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு அபிஷேகங்கள், துளசி மாலை, வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

See this map in the original post