௳ (முகப்பு)

View Original

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்

கருணை மழை பொழியும் தேவி கருமாரியம்மன்

சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது, மிகப் பிரசித்தி பெற்ற அம்மன் தலமான திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில். ஆதிகாலத்தில் வேப்பமரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் 'வேலங்காடு' என்று அழைக்கப்பட்டது இந்த இடம். நாளடைவில் திருவேற்காடு ஆகியது. கரிய மழை மேகம் போல் அம்மன் தன் அருளை வாரி வழங்குவதால் கருமாரி என்று பெயர் பெற்றாள். சகலமுமாய் இருப்பவள் தேவி கருமாரியம்மன். எனவேதான் அவளை,

'காற்றாகி, கனலாகி கடலாகினாய், கருவாகி, உயிராகி உடலாகினாய்

நேற்றாகி, இன்றாகி நாளாகினாய் நிலமாகிப் பயிராகி உயிராகினாய்...'

என்று நெகிழ்கிறது கருமாரியம்மன் பதிகம்.

கருவறையில், கருமாரியம்மன் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், தங்க விமானத்தின் கீழ் பராசக்தி அம்சமாக விளங்குகிறாள்.

இவளுக்குப் பின்புறம் ஓர் அம்பிகை சிலை உள்ளது. இவள் அக்னி ஜ்வாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி பத்ம பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். அம்மனின் சந்நிதியில், ஒரு விளக்கு அணையாமல் எரிகிறது. இதைப் 'பதி விளக்கு' என்கிறார்கள். அம்மனையும், இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் எந்தக் குறையும் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒருமுறை ஈசன் தேவர்களின் துன்பம் நீக்கச் சென்றபோது, இறைவன் அம்பிகையிடம் 'நீயே சிவனும், சக்தியுமாகி ஐந்தொழில்களையும் செய்யவேண்டும்!' என்று கூற, அம்பிகை சம்மதித்து அகத்தியரிடம் தான் ஆட்சி செய்யத் தகுந்த இடம் கேட்க, அகத்தியர் 'வேற்காட்டை'க் காட்டுகிறார். மாயாசக்தியான அவளிடம் மகாவிஷ்ணு 'நீ பாம்பு உருவாக புற்றில் இருந்து அருளாட்சி செய். கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவாய்!' என்று கூற அன்னை கருமாரியாக கருநாக வடிவம் எடுத்து புற்றில் அமர்ந்தாள். அந்தப் புற்று இன்றும் திருக்கோயில் அருகே உள்ளது. ஈசனிடமிருந்து திருநீற்றைப் பெற்றே அம்பிகை ஐந்தொழில்களையும் செய்தாள். அதுவே தீர்த்தமாக உருமாறி விட்டது.

பிரார்த்தனை

சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக இங்கு வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. கடன், வியாதி, வழக்கு, திருமணத்தடை, குழந்தையின்மை என்று அனைத்துவித பிரச்சனைகளுக்கும் பக்தர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், தேர் இழுத்தல், முடி காணிக்கை, குங்கும் அபிஷேகம், உப்பு காணிக்கை என்று பலவித பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகிறது.

See this map in the original post