௳ (முகப்பு)

View Original

திருவாரூர் தியாகராஜர் கோவில்

மார்கழி திருவாதிரை பாத தரிசன விழா

திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. மூலவர் தியாகராஜரின் முழு மூர்த்தத்தையும் யாரும் கண்டதில்லை. தில்லை இரகசியம் போல, திருவாரூர் இரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோமகுல இரகசியம் என்பர். சுவாமியின் மார்பை ஸ்ரீசக்கரம் அலங்கரிப்பதால், தியாகராஜரின் முழு திருமேனியையும் நாம் தரிசிக்க முடியாது. நித்தியப்படி அவரின் திருமுக தரிசனம் மட்டுமே நமக்கு கிட்டும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். அவை மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு முறை தியாகராஜர் பாத தரிசன விழா நடைபெறுகிறது. மார்கழி மாத திருவாதிரை அன்று வலது பாத தரிசனம் விழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு இடது பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தின்போது இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூரில் வலது பாதத்தையும் காட்டுவதாக ஐதீகம்.

See this map in the original post