௳ (முகப்பு)

View Original

இனாம் கிளியூர் மன்மதன் கோவில்

காமன் பண்டிகை - திருமணத் தடை நீங்க கரும்பு அல்லது கரும்புச்சாறு நைவேத்தியம்

பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றான காமன் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி மாசி பௌர்ணமி முடிந்து மூன்று நாட்கள் வரையில், காமன் பண்டிகை 15 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒரு பூஜைபோல் செய்கிற வழக்கம் இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன் அவர் மீது மலர்க்கணை தொடுத்த தினம் மாசி பௌர்ணமி ஆகும். இதனால் கோபமுற்ற சிவபெருமான், தன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கி விட்டார். காமனை எரித்ததே, காமதகனம் மற்றும் காமன் பண்டிகை என்னும் விழாவாக நம் கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், மாசி மகத்துக்கு முன்னதாக, மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் திருமணம்,

சிவபெருமானின் தவம், மலர்க்கணையால் சிவபெருமானின் தவம் கலைக்கும் மன்மதன், சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரிக்கும் காமதகனம், ரதிதேவி சிவபெருமானிடம் தன் கணவனை உயிர்பித்து தருமாறு வேண்டுதல், மன்மதன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து வருதல் என காமன் பண்டிகை தொடர்பான நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டாகவும் நாடகமாகவும் அரங்கேறும். மாசி பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாள் மன்மதன் மீண்டும் உயிர்த்தெழுந்து ரதியினை அடைந்தான்.

மாசி பெளர்ணமியின் போது, ஊருக்கு நடுவே, ஒரு கரும்பை நட்டுவைப்பார்கள் மக்கள். மன்மதன் கையில் கரும்பு வைத்திருப்பான். அந்தக் கரும்பையே வில்லாக்கி மலர்க்கணை தொடுப்பான். அந்தக் கரும்பை மன்மதனாக பாவித்து, அந்தக் கரும்புக்கு தர்ப்பைகளும் மலர்களும் சார்த்துவார்கள். நன்றாக அழகுற அலங்கரிப்பார்கள். அப்போது ரதிதேவியின் உருவத்தையும் ஓவியமாக வரைந்து வைப்பார்கள். சில ஊர்களில் மரத்தால் செய்யப்பட்டு, மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் வர்ணம் பூசி, சிலைகளைப் போல் வைத்து பூஜிப்பதும் நடைபெறுகிறது. மன்மதனாக பாவித்து நட்டுவைக்கப்பட்ட கரும்பை, தீயிட்டுக் கொளுத்துவார்கள். பிறகு, அப்படி எரியும்போது, அந்தத் தீயைச் சுற்றி, அந்தக் கரும்பைச் சுற்றி, மன்மதனைச் சுற்றி வலம் வந்து வேண்டிக்கொள்வார்கள். அப்படி வேண்டிக்கொண்டால், பூமி செழிக்கும், விவசாயம் தழைக்கும், வம்சம் விருத்தியாகும், வாழையடிவாழையென பரம்பரை சீரும் சிறப்புமாக வளரும், வளரச்செய்வார் மன்மதன் என்பது நம்பிக்கை.

மாசி பெளர்ணமியில், காமதகனம் நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், வீட்டில் மன்மதனை நினைத்தும், ரதிதேவியை நினைத்தும் விளக்கேற்றி, கரும்பு அல்லது கரும்புச்சாறு நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்கினால், இல்லத்தில் தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்குக் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தாம்பத்திய பிரச்னைகள் தீரும்.

See this map in the original post