௳ (முகப்பு)

View Original

மதுரை முக்தீஸ்வரர் கோவில்

ஆண்டிற்கு இரண்டு முறை சூரிய பூஜை நடக்கும் திருவிளையாடல் தலம்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலின் அருகில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதவல்லி தாயார். சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், முக்தீஸ்வரர் கோவில்.

இந்திரனின் ஐராவத யானைக்கு சாபவிமோசனம் அளித்த திருவிளையாடல்

இந்திரனின் வாகனம், 'ஐராவதம்' என்ற வெள்ளை நிறம் கொண்ட யானையாகும். ஒரு சமயம், துர்வாசக முனிவர், சிவபெருமானை பூஜை செய்து கொண்டுவந்திருந்த தாமரை மலரை இந்திரனிடம் தந்தார். அதனை வாங்கிய இந்திரன் சிவபெருமானின் பூசை மலரினை ஐராவதம் மத்தகத்தில் வைத்தார். அதனை எனனவென்று அறியாத ஐராவதம், அம்மலரை காலில் இட்டு அழித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசக முனிவர் ஐராவதத்தினை பூமியில் பிறக்கும் படி சாபமிட்டார். அதனால் பூமியில் அவதரித்த ஐராவதம், மற்ற யானைகளின் நிறத்தினை அடைந்து இந்திரன் உருவாக்கிய மதுரை கோயிலில் சிவலிங்கத்தினை வழிபட்டு வந்தது. பின்னர் சிவபெருமான் அருளால் சாபவிமோசனம் பெற்றது. ஆனால் ஐராவதத்திற்கோ, மதுரை மதுரையம்பதி விட்டு பிரிந்து செல்ல மணம் இல்லை. அதனால் சிவபெருமானிடம் தங்கள் கருவறை விமானத்தை தாங்கும் யானைகளில் தானும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்தது. ஆனால் சிவபெருமான், இந்திரன் என்னுடைய பக்தன். நீ அவனை சுமப்பது என்னை சுமப்பதற்கு ஒப்பானது. அதனால் நீ தேவலோகம் சென்று விடு என்று பணித்தார்.

இந்திரன் சிவபெருமானிடம், யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தான் எழுப்பிய மதுரை சொக்கநாதர் கோவில் விமானம், தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், ஐராவதம் தன்னைத் தாங்குவது போல் அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதர் கருவறை விமானத்தை தாங்கி இருப்பதை இப்போதும் நாம் காணலாம்.

இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய பகவானின் பூஜை

சூரியக் கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று குறிப்பிடுவார்கள். சூரிய பூஜை பல ஆலயங்களில் நிகழ்ந்தாலும், அவை குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டுமே நிகழும். ஆனால் இங்கோ, ஒவ்வொரு மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், அதாவது 10 ம் தேதி முதல் 21 தேதி வரையிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 19 முதல் 30 ம் தேதி வரையிலும், காலையில் இந்த அற்புதம் நிகழும்.

காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள், கருவறைக்குள் ஊடுருவுகின்றன.முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும். சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின் போது கோவில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படும்.இந்த நிகழ்வு இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

மொத்தம் 24 நாள்கள் நடக்கும் இந்த அற்புத தரிசனத்தைக் கண்டால் நம் மனதின் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் சூரிய பகவானே இங்கு முக்தீஸ்வரரைத் தன் கதிர்க் கரங்களால் தழுவி வழிபடுவதால் இந்த ஈசனை வணங்கினால் சூரியன் பலமில்லாத ஜாதகக் காரர்கள் சகல நன்மைகளையும் பெறமுடியும். மேலும் சூரியனே ஜாதக அடிப்படையில் ஆத்மகாரகன். அவன் பணிந்து கொள்ளும் இந்த முக்தீஸ்வரரை, நாமும் பணிந்துகொண்டால் நம் வினைப்பயன்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

See this map in the original post