௳ (முகப்பு)

View Original

கோடியக்காடு அமிர்தகடேசுவரர் கோவில்

அமுதக் கலசம் ஏந்திய அபூர்வ முருகன்

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோடியக்கரை அமிர்தகடேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மைத்தடங்கண்ணி. கோவில் இருக்கும் இடம் கோடியக்காடு என்றும் கடற்கரை பகுதி கோடியக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. நவகோடி சித்தர்கள் இன்றும் இத்தலத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது.

இத்தலத்து முருகன், மூலவர் அமிர்தகடேசுவரரை விட சிறப்பு வாய்ந்தவர். அவருடன் வள்ளி , தெய்வானை ஆகிய இரண்டு தேவிகளும் இருக்கின்றனர். சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுத கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம்,பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுத கலசத்துடன் உள்ள முருகப் பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற! பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார் இந்த முருகப்பெருமான் 'அமிர்தகரசுப்பிரமணியர்' என்றும் 'கோடிக்குழகர்' என்றும் அழைக்கப்படுகின்றார் .

தேவர்களும் அசுரர்களும் இந்த திருப்பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது .இந்த அமிர்த கலசத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார் வாயு பகவான். அப்போது அசுரர்கள் அனைவரும் சேர்ந்து சூறாவளி காற்றை உருவாக்கினார். அதனால் வாயு பகவான் அமிர்த கலசத்தை தவறவிட்டார். அப்படி தவறி விழுந்த அமிர்த கலசத்தை தலத்தில் உள்ள முருகப்பெருமான் தன் கையில் தாங்கி பின்னர் அதனை தேவர்களிடம் ஒப்படைத்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் தேவர்கள் மகிழ்ந்து கந்தனுக்கு நீலோற்பல மலரை பரிசாக அளித்தனர்.எனவே இத்தலத்தில் அருளும் முருகப்பெருமான் தன்னுடைய கரங்களில் நீலோற்ப மலரையும் அமிர்தத்தையும் தாங்கியபடி அருள் பாலிக்கிறார். அமிர்த கலசத்தில் இருந்து சிந்திய அமிர்தத்துளிகள் சிவலிங்கமாக உருவானது. அப்பெருமானே இத்தலத்தில் அருளும் அமிர்தகடேசுவரர் ஆவார்.

கோடியக்காட்டு முகத்துவாரத்தில் ராமபிரான், சேது பந்தனம் செய்ய நின்ற இடத்தில் ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனை பெறலாம் என்கிறார்கள். எனவே இது ஆதி சேது என்று போற்றப்படுகிறது. ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

பிரார்த்தனை

சரியாக பேச்சு வராத குழந்தைகள் இங்கு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த தேனை பருகினால் சிறந்த பலனை பெறுகின்றனர். சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமான அபிஷேகம் செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொடர்ந்து ஆறு சஷ்டி திதியில் விரதம் இருந்து இத்தல முருகனுக்கு ஆறு நிறத்தில் உள்ள மலர்களை சூட்டி ஆறு நைவேத்தியங்களை படைத்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். இங்கு வழிபட்டால் பித்ரு தோஷம் விலகும்.

See this map in the original post