௳ (முகப்பு)

View Original

நாகப்பட்டினம் குமரன் கோவில்

மயிலுக்கு பதில் யானை வாகனமாக விளங்கும் முருகன் தலம்

நாகப்பட்டினம் நகரத்தில், நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ளது குமரன் கோவில். இக்கோவிலில் மூலவராக, முருகப் பெருமான் வள்ளி தேவசேனாபதியாக 'மெய்கண்ட மூர்த்தி' என்னும் நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான். இதன் காரணமாக, மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் புதைந்து விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.

தோல் நோய் தீர்க்கும் முருகன்

இந்தக் கோவிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். பின்னர் அவர் பல தலங்களுக்குச் சென்று அங்கு தமிழில் கவி பாடி வழிபட்டு வந்தார். அவர் சிதம்பரம் கோவிலில் உயிர் நீத்தார். அப்போது இக்கோவிலில் மாலை வேளை பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது முருகன் அசரீரியாக, அழகு முத்துவின் ஆன்மா என்னுடன் ஐக்கியமாக இங்கே வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் வழி விடுங்கள் என்று உத்தரவிட்டார். இந்த நிகழ்வு இன்றும் வைகாசி விசாகத்தன்று இங்கு அனுசரிக்கப்படுகின்றது.

தோல்நோய் மற்றும் தொழுநோய் உடையவர்கள் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக பக்தர்களின் நம்பிக்கை.

செல்வ விருத்தி அளிக்கும் குபேரன் தலம்

இக்கோவிலின் வடக்கு பிரகாரத்தில் குபேரனுக்காக தனி சன்னதி அமைந்துள்ளது. அதனால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது.

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.

See this map in the original post