௳ (முகப்பு)

View Original

பெரும்பேடு வேங்கடேசப் பெருமாள் கோவில்

ஒரே கருவறையில் இரண்டு பெருமாள்கள் அருள் பாலிக்கும் அபூர்வ தலம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பெரும்பேடு கிராமம். இக்கிராமத்தில் உள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலில், ஒரே கருவறையில் இரண்டு மூலவர்கள் எழுந்தருளியிருப்பது வேறு எந்த பெருமாள் கோவிலிலும் காணமுடியாத அதிசயமாகும். இத்தலத்தில் பெருமாள், வேங்கடேசப் பெருமாள் மற்றும் ஆதிபஞ்சாயுதபாணி என்ற இரண்டு ரூபத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

முற்காலத்தில் இப்பகுதியில் அமணாசுரன் மற்றும் அமண அரக்கி என்ற இரு அரக்க சகோதர, சகோதரியர் மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தி வந்தார்கள். இதனால் பல துன்பங்களை அனுபவித்த இப்பகுதி மக்கள், பெருமாளை வேண்டி தங்களைக் காத்தருளுமாறு வேண்டினர். பக்தர்களைக் காக்க முடிவு செய்த பெருமாள் பஞ்சாயுதபாணியாக வடிவெடுத்து வந்து, அரக்கனையும் அரக்கியையும் வதம் செய்து இப்பகுதி மக்களைக் காத்தருளினார். அதோடு, பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி, இத்தலத்திலேயே ஆதிபஞ்சாயுதபாணியாக அருளத் தொடங்கினார்.

சங்கு எனும் பாஞ்சஜன்யம், சக்கரம் எனும் சுதர்சனம், கதை எனும் கௌமோதகி, வில் எனும் சாரங்கம் மற்றும் வாள் எனும் நந்தகம் முதலான பஞ்சாயுதங்கள், அதாவது ஐந்து ஆயுதங்கள் எப்போதும் பெருமாளுடனே இருப்பதாக ஐதீகம். திருமாலின் ஆயிரம் திருநாமங்களில், 'பஞ்சாயுதபாணி' என்பதும் ஒன்றாகும். இத்தலத்தில் பஞ்சாயுதங்கள் பெருமாளை வலம் வருவதாக ஐதீகம். இத்தலத்தில், பெருமாளின் திருக்கரத்தில் காணப்படும் சக்கரம் சற்றே வித்தியாசமாக, பிரயோக நிலையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

கருவறையில் வேங்கடேசப் பெருமாள் சதுர்புஜராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, சேவை சாதிக்கிறார். பெருமாளின் மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் விளங்க, கீழிரு கரங்களில் வலது திருக்கரம் அபய நிலையிலும், இடது திருக்கரத்தினை தொடை மீது வைத்தும் காட்சி தருகிறார்.

வேங்கடேசப் பெருமாளை வணங்கினால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பதும், பஞ்சாயுதபாணி பெருமாளை வணங்கினால் மனதிலுள்ள பயம் அனைத்தும் அகலும் என்பதும் ஐதீகம்.

வேங்கடேசப் பெருமாள் மற்றும் ஆதிபஞ்சாயுதபாணி

ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேங்கடேசப் பெருமாள்

See this map in the original post