௳ (முகப்பு)

View Original

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில்

இறைவனுக்கும் அம்மனுக்கும் சித்திரை முதல் ஏழு நாட்கள் சூரிய பூஜை நடக்கும் அதிசயத் தலம்

சென்னை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விக்ரவாண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பனையபுரம். இறைவன் திருநாமம் பனங்காட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் சத்யாம்பிகை. சிவனின் இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. பனை மரத்தை தல விருட்சமாக கொண்ட ஐந்து தலங்களுள் இதுவும் ஒன்று.

சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூரும் ஒன்றாகும். அதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால்,இறைவனையும் அம்மனையும் வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி ஏழு நாட்கள் தொடர்ந்து இறைவனுக்கும் அம்மனுக்கும்

சூரிய வழிபாடு நடப்பது வேறு எந்த தலத்திலும் கிடையாது. சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களால் இராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி,மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் இறைவனின் சிரசில் பட்டு வணங்குகிறது. இதன் பின் அது மெல்ல கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகின்றது. பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மன் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. பின்பு அந்த ஒளி மெல்ல கீழிறங்கி அன்னையின் பாதத்தில் அடைவதுடன் அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகின்றது. வானவியல் சாஸ்திர நுட்பத்தை உணர்ந்து, கோவிலின் கட்டிட வடிவமைப்பை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் புத்திக்கூர்மையையும், தொழில்நுட்பத்திறனையும் உலகத்துக்கு பறைசாற்றுகின்றது.

கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்

புறாவுக்கு அடைக்கலம் தந்து தன் கண்களை அளித்த சிபி சக்ரவர்த்திக்கு காட்சி தந்து மீண்டும் இறைவன் கண்ணொளி தந்த தலம் இது. பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.

குழந்தை வரம் அருளும் பனம் பழம்

இக்கோவிலில், தலமரமான பனை மரங்களில் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் பற்றிய முந்தைய பதிவு

https://www.alayathuligal.com/blog/atgmnl9tmpjtb4e3c3cyx939twz3md?rq

See this map in the original post