௳ (முகப்பு)

View Original

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்

பித்ரு வழிபாட்டிற்கு ஏற்ற ஆடி அமாவாசை

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும். இந்த மாதத்தில் தினக்கோளான சந்திரன் தனது ராசியான கடகத்தில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை. இது சிறப்பு வாய்ந்த முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்ற அமாவாசையாகும். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, ஆடி அமாவாசை என்று, பித்ருக்களை வழிபாடு செய்து, ஆசி பெறுவது வாழ்வை பல விதங்களில் மேம்படுத்தும். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியம் செய்யவும், வேண்டி விரதம் இருக்கவும் ஏற்ற நாளாகும். ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களை நாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற தலங்கள் சில உள்ளன. அவை, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், அரன்வாயல் வரமூர்த்தீஸ்வரர் கோவில், திருப்பள்ளிமுக்கூடல் குருவிராமேஸ்வரம் கோவில், பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற தலமாகும்.

காசியை விட பதினாறு பங்கு அதிகம் புண்ணியம் கிடைக்கும் திருப்புவனம்

பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. இத்தலம் மதுரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. கோவிலுக்கு நேர் எதிரே வைகை ஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தேவாரப் பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கினார். இறைவன் புஷ்பவனேஸ்வரர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி அவருக்கு காட்சி அருளினார்.

காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து புஷ்பவனேசுவரர் சன்னதி முன் உள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு அஸ்தி கரைப்பது, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும், அவர்களது ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் திருப்புவனம் ஆகும். மேலும் இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம்புண்ணியம் அருளும் தலம்.

See this map in the original post