௳ (முகப்பு)

View Original

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

அர்த்தநாரீசுவரர் மூலவராக இருக்கும் தேவாரத் தலம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில் மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், 'செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது. இம்மலை, ஒருபுறம் இருந்து பார்த்தால் ஆண் போன்ற தோற்றமும், வேறு ஒரு புறம் இருந்து பார்த்தால் பெண் போன்ற தோற்றமும் அளிப்பது சிறப்பாகும். 2000 ஆண்டுகள் பழமையான இம்மலை கோவிலுக்கு செல்ல 1200 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. கொங்கு நாட்டின் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

கருவறையில் மூலவராகிய அர்த்தநாரீசுவரர், ஆண்பாதி பெண்பாதி வடிவம் கொண்டு மாதொருபாகனாகக் காட்சியளிக்கிறார். இப்படி சிவனும் (வலதுபுறம்), சக்தியும் (இடதுபுறம்) சேர்ந்த ஒரே உருவாய், மாதொரு பாகனாய் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இப்படி இறைவன் மூலவராக, அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த விக்ரகம் ஒருவகை பாஷாணத்தால் உருவானது. வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீசுவரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், ‘தொன்மைக்கோலம்’ என்று அழைக்கிறார்.

வைகாசி விசாக திருக்கல்யாணம் - அர்த்தநாரீசுவரருக்கு அணிவிக்கப்படும் தாலி

அர்த்தநாரீசுவரர். மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர். சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும். பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து. பூரண சந்திரன் குடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன். சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும். இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும், மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீசுவரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

பிரார்த்தனை

அர்த்தநாரீசுவரர் திருவுருவப் படத்தை வைத்து வேண்டிக்கொண்டால்,. கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.

அர்த்தநாரீஸ்வர மந்திரம் :

ஓம் ஹும் ஜும் சஹ

அர்த்தநாரீஸ்வர ரூபே

ஹ்ரீம் ஸ்வாஹா

திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் வீட்டில் விளக்கேற்றி அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபட்டால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. நாகதோஷம், ராகு-தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர்

உற்சவர் அர்த்தநாரீஸ்வரர்

See this map in the original post