௳ (முகப்பு)

View Original

மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி கோவில்

மூலவர் அம்பிகை அர்த்தநாரீசுவரியாக எழுந்தருளியிருக்கும் அபூர்வ தோற்றம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கிழக்கே அரை கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளி கோவில். இக்கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாகும். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன்கள் ஆனந்தசௌபாக்கிய சுந்தரி, உஜ்ஜைனி காளியம்மன் ஆகியோர் ஆவார்.

சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீசுவர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூசைகள் நடக்கவேண்டும் எனக் கேட்டதன் விளைவாக, மாகாளிக்குடியில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் அம்பிகை ஆனந்த சௌபாக்கிய சுந்தரியாக எழுந்தருளினாள்.

பொதுவாக அர்த்தநாரீசுவர கோலத்தில், சிவபெருமான் வலதுபுறமும், பார்வதிதேவி இடதுபுறமும் காட்சியளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், பார்வதிதேவி வலதுபுறமும் சிவபெருமான் அவருக்கு இடதுபுறமும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். ஆனந்த சௌபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை 'ஆனந்த சௌபாக்கிய சுந்தரி' என்கிறார்கள்.

விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட உஜ்ஜயினி காளியம்மன்

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன்மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட உஜ்ஜயினி காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு இத்தலத்தில் கோவில் கட்டி வழிபட்டார்.

இத்தலத்தில், விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்திற்கும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனுக்கும் சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது.

பிரார்த்தனை

பௌர்ணமி, அஷ்டமி, அமாவாசை ஆகிய தினங்களில் இங்குள்ள சக்தி தீர்த்தத்தில் குளித்து உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டு வந்தால் நினைத்தக் காரியங்கள் கைக்கூடும் என்று வரலாறு கூறுகிறது. அஷ்டமி நாளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டு மேன்மை அடைந்து வெற்றிப் பெற்றவர்கள் ஏராளம்.

சண்டிஹோமம் வேள்வித்தீயில் தோன்றிய மாகாளியம்மன்

இக்கோவிலின் கும்பாபிஷேகம் இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. அதன்பின்னர் நாற்பத்தி எட்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று, இறுதியாக சண்டிஹோமம் 16.03.2023 அன்று நடைபெற்றது. அன்று, சண்டிஹோமம் வேள்வித்தீயில் மாகாளியம்மன் தோன்றியது, அப்பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட உஜ்ஜயினி காளியம்மன்

சண்டிஹோமம் வேள்வித்தீயில் தோன்றிய மாகாளியம்மன் (16.03.2023)

See this map in the original post