௳ (முகப்பு)

View Original

கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கல்யாண நவக்கிரக தலம் - நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

திருநெல்வேலியில் திருச்செந்தூர் சாலையில், 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குலசேகர நாயகி.

ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில், கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் என்னும் மன்னன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மலையைச் சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார். ஊருக்காகக் குளங்களை வெட்டினார். மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர். மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. இதற்கிடையில் குலசேகரன்பட்டினத்தைத் ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டுச் செல்லும்போது, அம்பிகை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனைக் கண்டு வணங்கி அங்கு ஒரு அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தார். குலசேகர நாதர் பிரதிஷ்டை செய்த அன்னைக்குக் குலசேகர நாயகி என்று பெயர். இதற்கிடையில் இந்த பகுதியில் முனிவர் பெருமக்களும், ரிஷிகளும் வந்திருந்து மார்த்தாண்டேஸ்வரரையும், இக்கோவிலுக்கு அருகில் உள்ள வகுளகிரி என்ற மலைமீது எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதியையும் வணங்கி நின்றனர். அப்பொழுது நவக்கிரகங்கள் அங்கே தம்பதி சகிதமாக காட்சியளித்தனர். அதைக் கண்டு முனிவர்களும், ரிஷிகளும் தங்களுக்குக் காட்சி தந்ததைப் போல மக்களுக்கும் தம்பதி சகிதமாக காட்சி தர வேண்டும் என்று வேண்டி நின்றனர். அதன்பின் இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சகிதமாக காட்சி தருகின்றனர். அதனால் இத்தலம், கல்யாண நவக்கிரக தலம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமையப் பெற்றுள்ளது.

பிரார்த்தனை

கணவன் மனைவியோடு இங்கு வருபவர்களுக்குக் கேட்ட வரங்கள் கிடைக்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் நீராடி விட்டு இந்த சிவனை வணங்கி அதன்பின் வகுளகிரி வெங்கடாசலபதியை வணங்கினால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும், குழந்தை பேறு கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், அடைபடாத கடன்கள் அடைபடும். தீராத வழக்குகள் நமக்குச் சாதகமாகும்.

இக்கோவிலுக்கு அருகில் இருக்கும் கருங்குளம் வெங்கடாசலபதி கோவில் பற்றிய முந்தைய பதிவு (06.07.2022)

சந்தனக்கட்டை வடிவில் பெருமாள்

https://www.alayathuligal.com/blog/79xdc6xywg6gft99ma999y9wdhzxaz?rq

 

See this map in the original post