௳ (முகப்பு)

View Original

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்

கல் நந்தி புல் தின்ற அதிசயம் நிகழ்ந்த தேவாரத்தலம்

கும்பகோணத்திற்குக் கிழக்கே, கல்லணை- பூம்புகார் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கஞ்சனூர். இறைவன் திருநாமம் அக்கினீஸ்வரர் . இறைவியின் திருநாமம் கற்பகாம்பிகை.

முன்னொரு காலத்தில், தேவசம்பு என்ற முதியவர் தனது பசுவிற்காக மிகவும் கனமான புல்லுக்கட்டை தலையில் சுமந்தபடி சென்றார். அப்போது நிலைதடுமாறி புல்லுக்கட்டை தவறவிட்டார். அது அருகில் நின்ற கன்றின் மீது விழுந்து அழுத்த, அந்தக் கன்று உயிரிழந்தது. கன்றின் உயிரைப் பறித்ததால் ஏற்பட்ட பாவம் அகல வேண்டும் என்றால், முதியவர் காசிக்குப் போய் நீராட வேண்டும் என்று சில வேத விற்பன்னர்கள் கூறினர்.

தேவசம்பு, அவ்வூரில் பிரசித்தி பெற்று விளங்கிய சிவஞானியார், ஹரதத்தர் என்பவரை அணுகினார்ர். ஆனால் ஹரதத்தரோ, 'அவ்வாறு நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் சிவனையே சிந்திக்கும் பக்தியுடையவர். நடந்தது உங்களை அறியாமல் நடந்த பிழை. அது பாவத்தில் சேராது. வேண்டுமென்றால் அதை சோதித்து பார்த்து விடலாம். அக்னீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள கல் நந்திக்குப் புல் கொடுங்கள். அது புல்லை ஏற்றுக்கொண்டு தின்றால் உங்களுக்கு தோஷமில்லை' கூறினார்.

இதையடுத்து கஞ்சனூரில் ஓடும் காவிரியில் மூழ்கிய முதியவர், இறைவனையும், இறைவியையும் வழிபட்டு விட்டு, அவர்களுக்கு எதிரே இருந்த கல் நந்திக்கு புல் கொடுத்தார். அது தலையைத் திரும்பி புல்லை வாங்கித் தின்றது. ஊர் மக்கள் அனைவரும் அதிசயித்துப்போனார்கள். இப்போதும், திருக்கஞ்சனூர் கோவிலில் தலையைத் திருப்பிய நிலையில் அமர்ந்திருக்கும் நந்தியை நாம் காணலாம். இந்த நந்தி புல் உண்டதால் அதன் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை.

அக்கினீஸ்வரர்

கற்பகாம்பிகை

புல் தின்ற நந்தி

See this map in the original post