௳ (முகப்பு)

View Original

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்

இருக்கன்குடி மாரியம்மனின் சிறப்பம்சம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.

வழக்கமாக, கோவில்களில், மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பார். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ, வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே, 'இருக்கன்குடி மாரியம்மனின் மிகப் பெரிய சிறப்பம்சமாகும்.

இருக்கன்குடி என்று பெயர் வரக் காரணம்

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுனன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு, இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால், 'இரு கங்கை' குடி என்று இருந்து, பின்னாளில் அது, 'இருக்கன்குடி' என்றாகி விட்டது.

மாரியம்மன் கோவில் உருவான வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சாணம் பெருக்க வந்த இருக்கன்குடி கிராமத்தை சார்ந்த பெண் ஒருத்தி, கூடையை வைத்துச் சாணம் பொறுக்கி சேர்த்திருக்கிறாள். ஓரளவு சாணம் சேர்ந்த பின்பு, அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோயில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர்.

குழந்தை வரம் அருளும் மாரியம்மன்

ஆடி, தை, பங்குனி மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இத்தலத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். இங்கு, குழந்தையில்லாதவர்கள், குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். உடல் குறைபாடுள்ளவர்கள், உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர். கண் நோய், வயிற்று வலி, அம்மை, கை, கால் வலி உள்ளவர்கள் இந்த மாரியம்மனை வணங்கினால் நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

See this map in the original post