௳ (முகப்பு)

View Original

ஊத்துமலை பாலசுப்ரமணியர் கோவில்

மயிலின் கழுத்தை வளைத்து பிடித்திருக்கும் பாலமுருகனின் அபூர்வ தோற்றம்

முருகன் யோக வேலை ஏந்திய ஒரே தலம்

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலையில் அமைந்துள்ளது பாலசுப்ரமணியர் கோவில். மலைக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இத்தலம் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது. அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்.

இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். பாலசுப்ரமணியர், குழந்தை வடிவில் காட்சியளிக்கிறார், முருகன், மயிலின் கழுத்தைப் பிடித்தபடி நிற்கும் தோரணையானது தனித்துவமானது. வேறு எந்த தளத்திலும் முருகனை இந்தக் கோலத்தில் நாம் தரிசிக்க முடியாது. முருகன் கையில் இருக்கும் வேல் யோக வேல் என்று அழைக்கப்படுகிறது. மற்ற தலங்களில் சக்திவேல், வைரவேல், வஜ்ரவேல், வீரவேல் போன்ற வேல்களை முருகன் தாங்கி பிடித்தாலும், இத்தலத்தில் மட்டும் தான் யோக வேலை ஏந்தி இருக்கிறார். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தில் கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து, அகத்திய முனிவர் பூஜை செய்திருக்கிறார். இப்படி கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம், இங்கும், அரித்துவாரிலும் மட்டுமே உள்ளது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. சப்த ரிஷிகளும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இத்தளத்தில் வழிபடுவதாக ஐதீகம். அந்த தினங்களில் நாமும் வழிபட்டால், அவர்களது ஆசிர்வாதத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை

இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் உண்டாகும்.

See this map in the original post