௳ (முகப்பு)

View Original

செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்

ஹயக்ரீவர் யோகநிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது செட்டிபுண்ணியம். பழமையான இந்தக் கோவிலில் மூலவர் வரதராஜப் பெருமாள். தாயார் ஹேமாம்புஜவல்லி. உற்சவர். தேவநாதப் பெருமான் மற்றும் யோக ஹயக்ரீவர். இந்தக் கோவிலில் உள்ள யோக ஹயக்ரீவர் மிகவும் பிரசித்தம். அதனால் இக்கோவிலை செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே மக்கள் கூறுகின்றனர். 'ஹயம்' என்றால் 'குதிரை' மற்றும் 'க்ரீவம்' என்றால் 'கழுத்து'. உடம்பில் கழுத்து வரை குதிரை உருவம் கொண்ட தெய்வம் என்று ஹயக்கிரீவர் குறிப்பிடப்படுகிறார்.

அந்நிய படையெடுப்பில் இருந்து காப்பாற்ற வேண்டி, 1848 ஆம் ஆண்டு திவ்ய தேசமான திருவஹீந்திரபுரம் கோவிலிலிருந்து இக்கோவிலுக்கு தேவநாத பெருமாள், ஹயக்ரீவர் விக்கிரகங்களும், பின்னர் தஞ்சாவூரிலிருந்து ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் விக்கிரகங்களும் கொண்டுவரப்பட்டன. அன்றிலிருந்து இந்த தெய்வங்கள் இக்கோவிலில் அருள்பாளித்து வருகின்றனர்.

இங்குள்ள குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தி நான்கு கைகளுடன் சங்கு, சக்கரதாரியாக யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். அனைத்து ஆலயங்களிலும் ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு ஹயக்ரீவர் யோக நிலையில் அபய முத்திரைக் காட்டியபடி ஸ்ரீதேவநாதன் எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேடக் காட்சி ஆகும்.

கல்வியில் முன்னேற்றம் கிடைக்க ஏலக்காய் மாலை

இந்த ஆலயத்தில் உள்ள யோகஹயக்ரீவரை திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும் என்பது நம்பிக்கை ஆகும். யோக ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் . ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்துச் செல்லும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். கல்விக்காக வேண்டுபவர்கள் மட்டும் இன்றி இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கும் , தமது தொழிலில் தடைகள் அகலவும் இங்குள்ள ஹயக்ரீவரை வந்து வழிபடுகிறார்கள். பேச முடியாதவர்கள் தேன் நிவேதனம் செய்து தினமும் சாப்பிட்டு வர பேசும் சக்தியை ஹயக்ரீவர் அருள்வார் என்பதும் நம்பிக்கை. இந்தக் கோவில் திருமணத் தடை, தொழிலில் தடை போன்றவற்றிற்கும் பரிகார ஸ்தலமாய் விளங்குகிறது. தல விருட்சம் அழிஞ்சல் மரம். இந்த மரத்தில் நூல், வேண்டுதல்கள் எழுதிய காகிதங்கள் முதலியவற்றைக் கட்டி, படிப்பிற்கும். குழந்தைப் பேற்றுக்கும் வேண்டிக் கொள்கிறார்கள்.

See this map in the original post