௳ (முகப்பு)

View Original

வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில்

மிக அற்புதமான கலைநயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட வெங்கனூர் கோவில்

பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள வெங்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் வருடங்கள் பழமையான விருத்தாச்சலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். இந்தக் கோவில் திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதில் அழகு என்ற வரிசையில் வெங்கனூர் கோவில் வேலை அழகு என்ற பெருமைக்குரியதாகும். சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோவிலில் 'கற்றளி' எனப்படும் கல்லால் ஆன 33 அம்சங்களுடன் செதுக்கப்பட்ட உயிரோட்டமான சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்திருக்கின்றன.இத்தலத்தில் உள்ள தூண்களை தட்டினால், வெண்கலத்தை தட்டுவது போல் ஒலி வந்தது. எனவே வெண்கல ஊர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் வெங்கனூர் என்று மருவியது.

இந்த கோவில் மற்ற கோவில்களைப் போல பூச்சு முறை இல்லாமல் கருங்கற்களை பொறுத்து முறையில், வடிவமைத்து கட்டப்பட்டுள்ள கோவிலாகும். இது, அக்காலத்தின் கட்டடக் கலையில் கையாளப்பட்ட நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது. இக்கோவில் கருவறை ஓம் வடிவ அமைப்பில் இருப்பது தனிச்சிறப்பாகும். கருவறை மண்டபமும், அதனைச் சுற்றியுள்ள சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள பல்லி, ஓணான், குரங்கு, கிளி உள்ளிட்ட உயிரினங்களின் சிற்பங்களும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள 2 சிற்பங்கள் எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் நான்கு விலங்குகளின் தோற்றமும், நான்கு முகங்களாகவும் தோற்றமளிக்கின்றன. இந்தக் கோவிலில் உள்ள தூண்களை விரல்களால் தட்டினால் விதவிதமான சங்கீத ஓசைகள் வருவதோடு, கோவிலினுள் கல்களால் ஆன சங்கிலி வளையம், சுழல்தாமரை போன்ற சிற்பங்களும் காண்போரைக் கவரும் விதமாக உள்ளது.

ஓம் வடிவ அமைப்பில் கருவறை

இசை ஒலி எழுப்பும் தூண்கள்

ஒரே கல்லிலான சிறிய இடைவெளி கொண்ட அழகிய வேலைப்பாடு

கல் சங்கிலி

விதானத்தில் இருக்கும் கிளிகள்

See this map in the original post