௳ (முகப்பு)

View Original

அமுதகடேசுவரர் கோயில்

அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கும் முருகப் பெருமான்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 'கோடிக்கரை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். குழக முனிவர் வழிபட்டதாலும், தென்கோடியில் இருப்பதாலும் இத்தலம் 'கோடிக்குழகர்' என்ற பெயர் பற்றது. திருப்பாற்கடலை கடைந்தபோது கிடைத்த அமுதத்தை வாயு பகவான் எடுத்துச் சென்றபோது கீழே சிந்திய அமுதமே லிங்க வடிவம் பெற்று இத்தலத்து மூலவராக இருப்பதாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து மூலவர் 'அமிர்தகடேஸ்வரர்' சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர் உள்ளார். அவர் அமிர்தா சுப்பிரமண்யர் என்னும் நாமத்துடன் ஒரு முகம், ஆறு கரங்களுடன், கையில் அமிர்த கலசம் கொண்டு வடக்கு நோக்கிய மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் நவக்கிரகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இராமபிரான் இங்கு வந்து இலங்கையை பார்வையிட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக வேதராண்யத்திலிருந்து வரும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் இடதுபக்கம் 'இராமர் பாதம்' என்னும் இடம் உள்ளது.